சென்னை, மே 4- கத்தரி இன்று (4.5.2026) தொடங்கி மே 28ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த ஆண்டு ‘சூப்பர் எல்-நினோ’ தாக்கத்தின் காரணமாக, கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உச்சகட்ட வெயில்
வேலூரில் நேற்று (3.5.2026) 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் ஈரோட்டில் 106 டிகிரி வரை வெயில் வாட்டியது.
வெப்ப அலை எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின்படி, அடுத்த 11 நாட்களுக்கு நாட்டின் பல இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். தமிழ்நாட்டில் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பரவலான மழை
கத்திரி வெயில் தொடங்கினாலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (4.5.2026) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
இலங்கை அருகே ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடற்கரை நோக்கிச் செல்லும் என்பதால், தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மழை மே 3ஆவது வாரம் வரை நீடிக்கக்கூடும் என்பதால், வெயிலின் உக்கிரம் சற்றே குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், காற்றில் ஈரப்பதம் காரணமாக புழுக்கம் அதிகமாக இருக்கும்.
அதிக வெப்பம் மற்றும் புழுக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டும். பழரசங்கள், மோர், இளநீர் போன்ற குளிர்ச்சியான நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைத் தவிர்க்கப் பருத்தி ஆடைகளை அணியலாம்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், வெயில் 106 டிகிரி வரை உயர வாய்ப்புள்ளதால் ஓரளவு பாதுகாப்பற்ற சூழல் நிலவும்.
மேட்டூர் அணை நீர்மட்டம்
80 அடியாக சரிவு!
80 அடியாக சரிவு!
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர், மே 4- காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (3.5.2026) காலை 3,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, போதிய நீரின்றிக் காணப்பட்ட ஒகேனக்கல் அருவிகளில் தற்போது தண்ணீர் மிதமாகக் கொட்டத் தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல்லில் வரத்து அதிகரித்தாலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சற்றே சரிவைக் கண்டுள்ளது. நேற்று முன்தினம் (2.5.2026) வரத்து: 716 கனஅடி. நேற்று (3.5.2026) காலை வரத்து: 669 கனஅடி.
தற்போது குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை விடத் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.குடிநீர் தேவைக்காகத் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதால், வரும் நாட்களில் நீர்மட்டம் மேலும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
