மாலே, மே 8- எல் நினோ அச்சுறுத்தலால் தெற்காசியாவில் சராசரிக்கும் குறைவாகவே பருவமழை பெய்யும் என காலநிலை கண்காணிப்புக் குழு (Climate Outlook Forum) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாலத்தீவில் நடைபெற்ற காலநிலை தொடர்பான மாநாட்டில் தெற்காசிய காலநிலை அவுட்லுக் போரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரவிருக்கும் தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெரும்பாலான தெற்காசிய நாடுகள் சராசரிக்கும் குறைவான மழையைப் பெற வாய்ப்புள்ளது. இது இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் நீண்டகால கணிப்புடன் ஒத்துப்போகிறது. இந்திய வானிலை ஆய்வு மய்யம் இந்த ஆண்டின் மழைப்பொழிவு நீண்டகால சராசரியில் 92 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ நிலைமைகள் உரு வாகி, 2026 இறுதி வரை நீடிக்க வலுவான வாய்ப்பு உள்ளது. இது பொதுவாக தென்மேற்கு பருவமழையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய நாடுகளில் மழைப்பற்றாக்குறை ஏற்படவுள்ளது.
அதே போல ஆப்கானிஸ்தான், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், மியான்மரின் சில பகுதிகள், இலங்கையின் சில இடங்களில் இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பருவமழை குறைவதற்கு எல் நினோ ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், பருவமழையைத் தீர்மானிப்பதில் அது மட்டுமே முக்கியப் பங்கு வகிக்க வில்லை. இந்தியப் பெருங்கடல் இருமுனை, வெப்பமண்டல அ ட்லாண்டிக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, யூரேசிய நிலப்பரப்பு வெப்பமடைதல் போன்ற பிற காலநிலைக் காரணிகளும் பருவ மழையின் போக்கை வடிவமைப்ப தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனினும் ஜூன்-செப்டம்பர் காலப்பகுதியில் இந்தியப் பெருங்கடல் இருமுனை உருவாகக்கூடும். இது பருவமழை பொழிவிற்கு சாதகமாக அமையக் கூடும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
