அரிதாரக் கனவுகள் அரியணை ஏறாது! கட்சியையே நடத்தத் தெரியாதவர்கள் ஆட்சி நடத்தப் போகிறார்களா? தமிழ்நாட்டின் அரசியலில் பொய்க்கால் குதிரைகளுக்கு வேலை யில்லை! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வியெழுப்பி அறிக்கை விடுத்துள்ளார்.
- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் உறுதிபூண்டுள்ளனர்
- பால பாடத்தை படிக்கத் தவறிவிட்டார்!
- எந்த அடிப்படையும் இல்லாமல்…
- ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் மறைமுகச் செயல்திட்டம் அல்லாமல் வேறு என்ன?
- சிறுபான்மையினர் ஏமாற மாட்டார்கள்!
- அரசியலுக்கு ஏற்பட்ட இழுக்கு!
- “தமிழ்நாடு வெற்றிடம் அல்ல; ‘கற்றிடம்!’ இங்குவந்து கற்றுக் கொண்டு தான் செல்லவேண்டும்”!
- மின்மினிப் பூச்சிகள், மின்சாரத்திற்கு ஒப்பாகுமா?
- திராவிடர் கழகம் முன்னின்று மேற்கொள்ளும்!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் உறுதிபூண்டுள்ளனர்
தமிழ்நாடெங்கும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி நீடிக்கவும், சமூகநீதி நிலைக்கவும், ஆதிக்க மதவாத சக்திகளிடமிருந்து தமிழ்நாடு தப்பிக்கவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.
இந்தத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெறச் செய்யக் கூடாது என்பதற்காக பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் பல்வேறு முயற்சிகளைச் செய்துள்ளன. திரிசூலங்களைக் காட்டி, சில கட்சி களை நேரடியாக அணி திரட்டினர். மறைமுகமாக ஒரு கூட்டத்தை தங்கள் வசமாக்கி, கடப்பாறை கொடுத்த னுப்பினர்.
இன்னொருபுறம் இளைஞர்களைத் திசைதிருப்ப, திராவிட அரசியலிலிருந்து மடைமாற்ற சினிமா கவர்ச்சியை நாடினர். திரைப்படங்களில் நடித்துப் பெற்ற புகழையும், அதனால் உருவான ரசிகர் கூட்டத்தை யுமே மூலதனமாகக் கொண்டு ஒருவரைக் களம் இறக்கினர். அதையே ‘‘மாற்றம் மாற்றம்’’ என்று ஊடகங்களின் வழியாக கூவச் செய்தனர். தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் ஏதோ ஒரே பாதையில் அவரை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டதாக Narrative செய்யத் தொடங்கினர். ‘மீட்பரைக் கண்டது போல’ இளைஞர்களும், பெண்களும் திரளுவதாகக் கதை கட்டினர்! அதற்கேற்ற ‘பாவனைகளை’த் துணை நடிகர்கள் மூலம் அவர்களே நடித்தும் காட்டினர். (அவை யெல்லாம் ஊடகங்களில் அம்பலப்பட்டுப் போயின என்பது தனிக்கதை.)
பொதுவாழ்க்கை என்றால் என்னவென்றே அறியாத ஒருவர், நேரடியாக அடுத்த முதலமைச்சர் தான் தான் என்பது போல் உலாவத் தொடங்கினார். திரைப்பட நடிகர்களை நேரில் காண்பது அரிது என்ற மக்களின் மனதில் இருக்கும் பிம்பமும், வயது வேறுபாடின்றி எல்லோரையும் ‘பிடித்திருக்கும்’ ‘செல்ஃபி’ நோயும் மக்கள் திரளக் காரணமாயின. ஆனால், அதையே தங்கள் அரசியலுக்கான பெரும் வரவேற்பு என்று கருதிக் கொண்டார்கள்.
பால பாடத்தை படிக்கத் தவறிவிட்டார்!
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர் திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பதால், அதே பாதையில் தங்கள் வாகனத்தையும் செலுத்தலாம் என்று கருதி முயற்சிக்கிறார்கள். ஒரு கட்சியில் இணைந்து பணியாற்றி, மெல்ல மெல்ல அந்த நிலைக்கு வந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இவர்களோ ‘வந்தால் முதலமைச்சராகத் தான் வருவேன்’ என்று திமிர்பிடித்து, அதற்காகக் காய் நகர்த்துகிறார்கள். ஆனால், இதே நம்பிக்கையில் வந்த எண்ணற்ற திரைப்பட நடிகர்கள் வந்த இடத்திற்கு திரும்பச் சென்று விட்டார்கள் என்ற பாடத்தை அவர் படிக்கத் தவறிவிட்டார்.
எந்த அடிப்படையும் இல்லாமல்…
ஓரிரண்டு ஆண்டுகள் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பரிசு கொடுத்துவிட்டால், அதுவே தங்கள் அரசிய லுக்கான தகுதி என்று கருதிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் சூழல் என்ன? தேவை என்ன? ஒரு கட்சி தொடங்கி நடத்துவதென்றால் அதற்கான கொள்கை என்ன? கட்டுப்பாடு என்றால் என்ன? கட்சித் தொண்டர்களைப் பயிற்றுவது எப்படி? என்று எந்த அடிப்படையும் இல்லாமல், மந்தை மனநிலையில் ரசிகர்களை வைத்திருப்பதே போதும் என்று கருதிக் கொண்டு ஆட்சிக் கனவு காணத் தொடங்கிவிட்டார்கள். அதன் கொடூர விளைவு தான் கரூரில் நடந்த பெருந்துயரம். 41 பேர் துள்ளத் துடிக்க இறந்தபின்னும், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் தன்மை கொஞ்சமும் இன்றி, அதை அடுத்தவர் மீது பழிபோடுவதைத்தான் நேற்று முன் தினம் வரை செய்து வருகின்றார்.
அதன்பிறகாவது பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டுமே! இல்லை என்பது தான் நாம் கண்ட உண்மை. தன் மீதான பிம்பம் அகன்றுவிடக் கூடாது என்பதில் மட்டும் அவர் உறுதியாக இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் மறைமுகச் செயல்திட்டம் அல்லாமல் வேறு என்ன?
இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய ஜனநாயக நெருக்கடியை, பாசிச ஆபத்தை எதிர்த்து பெரும் பெரும் அரசியல் கட்சிகள், தலைவர்கள், சமூக இயக்கங்கள் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், “பாசிசமா? பாயாசமா?” என்று ஒரு பேராபத்தை நகைப்புக்குரிய பொருளாக ஆக்கியது, பாசிச எதிர்ப்பின் வீரியத்தை இளைஞர்கள் மத்தியில் செல்லவிடாமல் தடுப்பதற்கான சூழ்ச்சியே ஆகும்! இது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் மறைமுகச் செயல்திட்டம் அல்லாமல் வேறு என்ன? இது என்ன சினிமா வசனமா? கொஞ்சமாவது பொறுப்பு ணர்வு வேண்டாமா?
கட்சி தொடங்கிவிட்டோமே, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறோமே, அதற்காக உழைக்க வேண்டுமே, மக்களைச் சந்திக்க வேண்டுமே என்ற எண்ணம் இல்லாமல், இப்போதும் அடிப்படை குடிமை ஒழுக்கம் (Civil Obedience) கூட இல்லாத கும்பலை அப்படியே வைத்துக் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்களே, இது அவரது கட்சிக்கு மட்டுமா கேடு? சமூக ஒழுங்குக்கே கேடு அல்லவா? இழுக்கு அல்லவா?
ஒரு கட்சியைக் கூட கட்டுப்பாடாக நடத்தத் தெரியாதவரா ஓர் ஆட்சியை நடத்தப் போகிறார்? பிரச்சாரத்துக்குப் பாதிநாள் லீவு போடுகிறார்; காத்திருக்கும் மக்களைத் துச்சமென மதிக்கிறார்; குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களை அரசியல் பகடைக்காயாக்குகிறார்.
சிறுபான்மையினர்
ஏமாற மாட்டார்கள்!
ஏமாற மாட்டார்கள்!
அவர் கட்சி தொடங்கியதற்குப் பிறகே, எத்தனை சிக்கல்கள் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டுவிட்டன? அவற்றில் எவற்றுக்கெல்லாம் கண்டனம் தெரிவித்தார்? கிறிஸ்துவ, இஸ்லாமிய சிறுபான்மையினர் ஓட்டுகளைக் குறிவைத்துச் செயல்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்பவே அவரும் வேடம் போடுகிறார். ஆனால், அம் மக்கள் குடியுரிமையைப் பறிக்க ஒன்றிய அரசு சூழ்ச்சி செய்த போதும், கிறிஸ்துவ நிறுவனங்களைச் செயலிழக்கச் செய்ய எப்.சி.ஆர்.ஏ சட்டத்தைத் திருத்த முயற்சிக்கும்போதும் ஒரு சாதாரண எதிர்ப்பைக் கூட காட்ட முன்வரவில்லையே! திடீரென முட்டிக் காலில் நடப்பதும், குல்லா போட்டுக் கொள்வதும் மட்டும் கண்டு சிறுபான்மையினர் ஏமாந்து விடுவார்களா?
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காமராஜர் என்று தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்திவிட்டால், அதைக் கண்டு ஏமாந்து விடுவார்கள் என்று கருதிக் கொண்டார்கள் போலும்! இப்படி எத்தனை படங்களை (பெரியார் படம் தவிர) பா.ஜ.க. தன் அலுவலகத்தில் மாட்டி வைத்திருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாதா? இவர்கள் எல்லாம் கொள்கைத் தலைவர்கள் என்று சொன்னால் மட்டும் போதுமா? இவர்களின் கொள்கைகளைத் தங்கள் கட்சிக்காரர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்களா? அதற்கான முயற்சியாவது, ஏன் எண்ணமாவது உண்டா? அவையெல்லாம் அவர்களுக்கு அவசியமில்லை. டிவிகே, டிவிகே என்ற கூச்சலும், செல்ஃபிக்களும், திரைப்பட கிளைமாக்ஸ் போன்ற வசனங்களும், அதே உடல் மொழியும், அதிலும் இவையெல்லாம் வேறு ஒரு மாநிலத்து நடிகருக்கு செய்யப்பட்டவற்றின் ‘காப்பி’ என்று சமூக ஊடகங்கள் படத்துக்குப் படம், செயலுக்குச் செயல் ஒப்பிட்டு அம்பலப்படுத்திவிட்டன. ஆனாலும், அந்த ஸ்கிரிப்ட் கொஞ்சமும் மாறாமல் ‘ரீமேக்’ (Remake) செய்யப்பட்டது. மக்கள் அவ்வளவு மடையர்கள் என்று இந்தக் காலத்திலும் கருதுகிறார்களே, என்ன கொடுமை!
‘‘ஊழல், ஊழல்’’ என்று பேசுவதற்குத் தகுதி உண்டா? வருமானத்தைக் குறைத்துக் காட்டி, அரசை ஏமாற்றியதற்காக வருமான வரித்துறை 1.5 கோடி ரூபாய் தண்டம் விதித்திருக்கிறது. அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்துக்குப் போய் குட்டுப் பட்டும் இன்னும் அதைக் கட்ட மனமில்லையே!
ஒரு வேட்பு மனு விண்ணப்பத்தையே முறையாக நிரப்பத் தெரியாமல், மூன்று முறை திருத்தம் கொடுத்த வர்களைப் பார்த்திருக்கிறோமா? அதிலும் சொத்துக் கணக்கில் எத்தனைக் குளறுபடிகள்! 100 கோடி ரூபாயை மறைத்திருக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறதே, அதற்குப் பதில் என்ன?
கட்சிக் கொள்கை, கட்டுப்பாடு, அறம், ஒழுங்கு என்று எந்த அடிப்படைப் பண்பும் இல்லாமல், பதவி ஒன்றே குறிக்கோள் என்று எளிய இளைஞர்களை ஏமாற்றலாம், மகளிரை ஏமாற்றலாம் என்று வருவதும் யோக்கியத் தன்மையான செயலா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அரசியலுக்கு ஏற்பட்ட இழுக்கு!
இவரது பிரபலத்தை எப்படியாவது கைக் கொண்டு ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் எவ்வளவு முயற்சித்தார்கள்! டில்லியில் பேச்சுவார்த்தை, நடிகை மூலம் மும்பையில் பேச்சுவார்த்தை, ‘‘பிள்ளையார் சுழி போட்டாச்சு’’ என்று பிரஸ்தாபங்கள் – இவையெல்லாம் அரசியலுக்கு ஏற்பட்ட இழுக்கு! ஆனால், இவையெல்லாம் செய்யப்பட்டது யாரால் என்பதை உணர்ந்தால் அவர்களது தரமும் அம்பலப்பட்டு நிற்கிறது.
ஊடகங்கள் இவற்றையெல்லாம் குறித்து எப்படி எழுதியிருக்க வேண்டும்? எப்படி காட்டியிருக்க வேண்டும்? ஆனால், அவை தங்கள் கடமையைச் செய்தனவா? அவர் வீட்டின் வாசல் கதவையே எவ்வளவு நேரம் நேரலையில் ஒளிபரப்பினார்கள். விஜயைப் பார்த்து வந்ததையும், அவர் பேட்டி தரவில்லை என்பதையுமே ‘எக்ஸ்க்ளூசிவ்’ என்று விற்றுச் சம்பாதித்தார்கள். வீட்டிலிருந்து கிளம்பியது முதல் வாகனத்தில் தொற்றிக் கொண்டே நேரலை போட்டார்கள். வழியெல்லாம் விபத்துகளில் இளைஞர்கள் விழுந்த போது, அவற்றைவிட நடிகரின் காரைப் பின் தொடர்வதிலேயே குறியாக இருந்தார்கள். வெட்கம்.. வெட்கம்!
“தமிழ்நாடு வெற்றிடம் அல்ல; ‘கற்றிடம்!’ இங்குவந்து கற்றுக் கொண்டு தான் செல்லவேண்டும்”!
தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞரும், செல்வி ஜெயலலிதா அம்மையாரும் இல்லாத கடந்த தேர்தலின் போது, இப்படித்தான் ‘‘வெற்றிடம், வெற்றிடம்’’ என்று கூவினார்கள். ஆனால், “தமிழ்நாடு வெற்றிடம் அல்ல; ‘கற்றிடம்!’ இங்குவந்து கற்றுக் கொண்டு தான் செல்லவேண்டும்” என்று நாம் தான் முதலில் சொன்னோம். அது தான் நடந்தது. இந்தியா மட்டுமல்ல… உலகின் பல நாடுகளும் இன்று ஓர் இயக்கத்தை எப்படி நடத்துவது? ஓர் ஆட்சியை எப்படி நடத்துவது? மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது எப்படி? அநீதி என்றால் அதைச் சட்டப்படி எப்படி எதிர்கொள்வது? இந்தியாவின் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஜனநாயக ரீதியில் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பது எப்படி? என்று கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மின்மினிப் பூச்சிகள், மின்சாரத்திற்கு ஒப்பாகுமா?
எத்தனையோ மின்மினிப் பூச்சிகள் வரலாம், அவை மின்சாரத்துக்குக் கூட ஒப்பாகாது என்றால், ஒளிப்பிழம்பாம் சூரியனுக்கு ஒப்பாகுமா?
‘பொய்க் கால் குதிரைகளும்’, கூட்டத்துக்கு வர மறுக்கும் சண்டிக் குதிரைகளும், போர்ப் புரவிக்கு ஈடாகுமா?
இந்தத் தேர்தலில் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிய அவர்களது பலூன் இன்றைய வாக்கெடுப்பின்போது முற்றிலும் காற்றிறங்கிப் போகும் என்பது தெரிந்து தான், நாமோ, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரோ, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்களோ இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அவர்களது உண்மையான வாக்கு சதவீதம் என்பது சொற்பமானதே! முதலமைச்சர் கனவு என்பதும், திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று கூச்சலிட்டதும் எத்தனை மோசடியானது என்பதை அந்தச் சில இளைஞர்கள் காலம் தாழ்ந்தேனும் உணர்வார்கள். மாற்றம் என்பது ஏமாற்றமாகவே முடிவது உறுதி!
தமிழ்நாட்டில் இந்த ஏமாற்று வித்தைகள் எல்லாம் பலிக்காது என்பதை மீண்டும் இந்தத் தேர்தல் நிரூபித்துக் காட்டும்! என்றாலும் அந்த மாயையில் சிக்கியுள்ளவர்களையும் மீட்க வேண்டியது நமது கடமை.
திராவிடர் கழகம் முன்னின்று மேற்கொள்ளும்!
குடிநோயாளிகளை, போதை நோயாளிகளை மீட்க மய்யங்கள் இருப்பதுபோல, சினிமா போதையில் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்கவும் நாம் பணியாற்ற வேண்டியது நமது அவசர அவசிய கடமை! அதனைத் திராவிடர் கழகம் அடுத்து முன்னின்று மேற்கொள்ளும்!
அறியாமை வீழும்; சுயமரியாதை வெல்லும்!
சூழ்ச்சிகளும், வேடங்களும் முறியடிக்கப்படும்!
திராவிடத்தின் பெருவெற்றி கொடியேற்றும்!
திராவிடம் வெல்லும் – நாளைய வரலாறு என்றும் சொல்லும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.4.2026

