சென்னை, ஏப்.21 நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி தற்போது பரப்புரைப் பாடல் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். தலைவன் இருக்கின்றான், திராவிட தலைவன் இருக்கின்றான் என துவங்கும் அப்பாடலை கமலே எழுதிப் பாடி இருக்கின்றார். தற்போது கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அந்த பாடலை வெளியிட்டுள்ளார். வெல்லும் படை இது..விலகிடு விலகிடு..தமிழ்நாட்டின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் திராவிட சங்கநாதம் தலைவன் இருக்கின்றான் இனி உங்கள் வசம். நல்லவர் கேட்டிட நன்றே பரப்புங்கள் என பதிவிட்டு கமல்ஹாசன் தான் எழுதிப் பாடிய பரப்புரை பாடலை வெளியிட்டுள்ளார்
மேலும் அந்த காட்சிப் பதிவில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால், அறிவார்ந்த தமிழ் மக்களின் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலை எதிரொலித்தது..அதன் விளைவு தான் தலைவன் இருக்கின்றான் என்ற பாடல்.அதிலிருந்து ஒருவரியை சொல்ல விரும்புகின்றேன், என்றும் தமிழ்நாடு வென்றிட வேர்விட விதையாய், செடியாய், மரமாய், காடாய், வீடாய், நாடாய், உலகம் விரிந்திட வாழ்த்துதுமே என கூறி அந்த பாடலை வெளியிட்டார் கமல்ஹாசன்.
இந்நிலையில் இந்த பாடலை கேட்ட திமுகஆதரவாளர்கள் கமலை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது பாடல் அல்ல, உணர்வுமிக்க எழுச்சி, திராவிட உணர்ச்சி என கமல்ஹாசனை புகழ்ந்து வருகின்றனர். ஒருபக்கம் திமுகவினர் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் பாடலை பாராட்டி வரும் அதே நிலையில் எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் காழ்ப்புணர்ச்சியில் விமர்சிப்பதையும் பார்க்க முடிகின்றது. தேர்தல் பரப்புரை நிறைவுறும் சூழலில் கமல்ஹாசன் தீவிர சுற்றுப் பயணம் செய்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
