2026 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன. அய்ந்து ஆண்டு கால ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கூறி, மக்களுக்குத் தந்திருக்கக்கூடிய பயன்களை விளக்கி, வாக்கு சேகரித்து வருகின்றனர் தி.மு. கழக நிர்வாகி கள். தி.மு. கழகத் தலைவர் அவர்களும், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் அவர்களும் களத்தில் ஓய்வின்றி பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். அவர்களுக்கு இணையாக 93 வயது நிறைந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களும், கடும் வெயிலிலும் பரப்புரை செய்து கவனம் ஈர்த்து வருகிறார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பிலான வேட்பாளர்களை ஆதரித்து, வயதைக் கடந்தும் அவர் பயணம் மேற்கொள்கிறார். தொடர் கூட்டங்கள், தொடர்ந்து பேசும் உறுதி இவை அனைத்தும், வெறும் ஆதரவு அல்ல, திராவிட இயக்கத்தின் அடிப்படை மதிப்புகளைத் தூக்கி சுமக்கும் இயக்கம் தி.மு.க. என்பதை உறுதிசெய்யும் செயல் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 6 ஆம் தேதி தொடங்கிய அவரது பரப்புரைப் பயணம் 21 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தை மீண்டும் அரியணையில் அமர்த்த வேண்டும், அதன் மூலம் தொடரவிருக்கும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் நிறைவேற்றவிருக்கும் சாதனைத் திட்டங்களை அவர் பேசுவது, சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. ஆசிரியர் அவர்களின் களப்பணியை, தி.மு. கழகத் தலைவர் அவர்களும் சமூக வலைதளப் பக்கத்தில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் எண்ணம் ஈடேறும்.
கழகம் வெல்லும்! தமிழ்நாடு வெல்லும்!
நன்றி:
‘முரசொலி’ 14.4.2026

