புதுடில்லி, ஏப்.6 மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும், எழும் அச்சத்தையும் மூலதனமாகக் கொண்டு சைபர் குற்றவாளிகள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர்.
தற்போது ஈரான் போர்ச் சூழலால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சலசலப்பைப் பயன்படுத்தி, ‘எல்.பி.ஜி எரிவாயு உருளை மோசடி’ புதிய வடிவெடுத்துள்ளது.
எரிவாயு உருளை தட்டுப்பாடு!
எரிவாயு உருளை தட்டுப்பாடு வரக்கூடும் என்ற பயத்தில் இருக்கும் மக்களைக் குறிவைத்து, கைப்பேசிகளுக்குப் பல்வேறு குறுஞ்செய்திகள் (எஸ்எம்எஸ்) அனுப்பப்படுகின்றன. அதில்:
கேஒய்சி அப்டேட்: “உங்கள் எல்.பி.ஜி கணக்கில் கேஒய்சி அப்டேட் செய்யப்படவில்லை. உடனே செய்யாவிட்டால் எரிவாயு உருளை கிடைக்காது.”
ஆதார் இணைப்பு: “உங்கள் எரிவாயு இணைப்புடன் ஆதார் இணைக்கப்படவில்லை, உடனடியாக இணைக்கவும்.”
இணைப்பு துண்டிப்பு: “நிலுவைத் தொகையை உடனே செலுத்தாவிட்டால், உங்கள் எரிவாயு இணைப்பு இன்றுடன் ரத்து செய்யப்படும்.”
இத்தகைய செய்திகளுடன் வரும் மர்ம லிங்குகளை கிளிக் செய்யும்போது, உங்கள் வங்கித் தகவல்கள் திருடப்படலாம் அல்லது உங்கள் கைப்பேசி ஹேக் செய்யப்பட்டு பணம் அபகரிக்கப்படலாம்.
தலைநகர் டில்லியில் இத்தகைய புகார்கள் அதிகரித்ததை அடுத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த மோசடிகள் அரங்கேறத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
அதிகாரப்பூர்வ வழிமுறை: நீங்கள் எப்போதும் வழக்கமாகப் பயன்படுத்தும் எரிவாயு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி (ஆப்) அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசி எண் மூலமாக மட்டுமே எரிவாயு உருளை முன்பதிவு செய்யுங்கள்.
குறுஞ்செய்திகளில் வரும் எந்தவொரு தெரியாத லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். நேரடித் தொடர்பு: கேஒய்சி அல்லது ஆதார் அப்டேட் குறித்து சந்தேகம் இருந்தால், உங்கள் கைப்பேசி மூலம் செய்யாமல், நேரடியாக உங்கள் எரிவாயு ஏஜென்சி அலுவலகத்திற்குச் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வங்கி கணக்கு எண்கள், ஒடிபி அல்லது கடவுச்சொற்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
அரசாங்கமோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களோ தனிப்பட்ட லிங்குகளை அனுப்பி பணம் செலுத்தவோ, தனிப்பட்ட தகவல்களைக் கேட்கவோ மாட்டார்கள்
