பெங்களூரு, ஏப்.3 கருநாடக முதலமைச்சர் பதவியை கைப்பற்ற துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா தானே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதலமைச்சராக தொடரப் போவதாக தெரிவித்தார்.
கருநாடக முதலமைச்சராக சித்தராமையா பொறுப்பேற்று வருகிற மே மாதத்துடன் 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படு கிறது. அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் 10-க்கும் மேற்பட்டோர் இதே கோரிக்கையை வலியுறுத்தி போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது குறித்து முதலமைச்சர் சித்தராமையா நேற்று (2.4.2026) பாகல்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருநாடகாவில் முதலமைச்சர் நாற்காலி காலியாக இல்லை. இப்போது அதனைப் பற்றி பேசுவது தேவையற்றது. முதலமைச்சர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம். ஆனால் மக்களின் விருப்பம் அதிகமாக யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் முதலமைச்சராக முடியும். காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.
ஊடகங்கள் எதற்காக முதலமைச்சர் விவகாரத்தை பெரிதாக்குகின்றன. ஊடகங்களின் இத்தகைய செயல்பாட்டில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை மக்களின் விருப்பமும், காங்கிரஸ் மேலிடத்தின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நானே முதலமைச்சராக தொடர்வேன். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார். இந்த கருத்துக்கு டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
