சென்னை, மார்ச் 31- அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி நேற்று (30.3.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து விரிவான விளக்கங்களை முன்வைத்தார்.
தி.மு.க. வாக்குறுதி
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளின் தற்போதைய நிலை குறித்து அவர் பகிர்ந்துகொண்ட புள்ளி விவரங்கள்: நிறைவேற்றப் பட்டவை: 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு: மீதமுள்ளவற்றில் 37 திட்டங்கள் ஒன்றிய அரசின் அனுமதி அல்லது ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் உள்ளன.
நடைமுறைச் சிக்கல்கள்: சுமார் 64 திட்டங்கள் மக்களின் எதிர்ப்பு அல்லது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
“வாக்குறுதிகளில் இல்லாத ‘காலை உணவுத் திட்டம்’, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற மகத்தான திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தி யுள்ளார்.” என கனிமொழி பெருமிதம் தெரிவித்தார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. நகல் (Copy) அடிப்பதாகக் கூறுவது நகைப்புக்குரியது என்று சாடிய அவர், எதிர்க்கட்சியினருக்குத் தமிழ்நாட்டில் தற்போது என்னென்ன திட்டங்கள் நடை முறையில் உள்ளன என்பது கூடத் தெரியவில்லை என்று விமர்சித்தார். திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளாமல் அதிமுக தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.
