சென்னை, மார்ச் 23- சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றின் மாதிரிகள் போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதில், காகங்களுக்கு பறவை காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிண்டி சிறுவர் பூங்காவிலும் காகங்கள் உயிரிழந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்பட்டது. காகங்கள் உயிரிழந்த போதிலும், தமிழ்நாட்டில் இதுவரை மனிதர்கள் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது சுகாதாரத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மற்ற வகை பறவைகளுக்கும் இந்த பாதிப்பு பரவவில்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தடுப்பு நடவடிக்கைகள்
பயப்படத் தேவையில்லை என்றாலும், மக்கள் போதிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது: கோழி இறைச்சியை உண்ணும் போது, அதனை நன்கு வேகவைத்து சமைத்து உண்ண வேண்டும். இதுவே பாதுகாப்பான முறையாகும். பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால் போதுமானது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
