சென்னை, மார்ச் 21- “அதிமுக தலைமை அலுவலகத்தை தேர்தல் முடியும் வரை பூட்டி வைத்துவிடுங்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை சொல்லி இருக்கிறார்.
தொகுதிப் பங்கீடு
இதுகுறித்து அவர் நேற்று (20.3.2026) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
டில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, கூட்டணி பேச்சு வார்த்தைக்காக 2 மணி நேரம் காத்திருந்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் தலைமை அதிமுக எனில் அந்த கட்சியின் அலுவலகத்தில் தானே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும். ஆனால், அமித் ஷா வீட்டில் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியின் அலுவலகத்தில் இதுவரை ஒருமுறைகூட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதற்குகூட திராணி இல்லாமலா இருக்கிறது அதிமுக?
அதிமுக தலைமை அலுவலகத்தை தேர்தல் முடியும் வரை பூட்டி வைத்துவிடுங்கள் பழனிசாமி. அதிமுக-வுக்கு கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவதற்காக பழனிசாமி, இன்னொரு கட்சி தலைவர் வீட்டில் காத்துக் கிடப்பது காலக்கொடுமை. கூட்டணி தொடர்பாக அமித் ஷாவிடம் பேசுவதற்காக இதுவரை ஒன்பது முறை பழனிசாமி டில்லி சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் அமித் ஷாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் அதிமுக, அண்ணா அதிமுகவா இல்லை அமித் ஷா அதிமுகவா? என்றார் கே.என்.நேரு.
கட்சியையே டில்லியில் அடமானம் வைக்கத் துணிந்த பழனிசாமி, ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக-வுக்கு காவு கொடுத்த பழனிசாமி, இப்போது அதிமுக தொண்டர்களையும் முழுமையாக அடகு வைத்துவிட்டார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என பழனிசாமி புலம்பினாலும் அமித் ஷாவும், மோடியும் அதை பொருட்படுத்தவே இல்லை.
இந்த அடிமைகளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் நுழைந்து விடலாம் என கற்பனைக் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் பித்தலாட்ட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டித்தான், இந்த தேர்தல், தமிழ்நாடு வெர்சஸ் டில்லி என சூளுரைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
