சித்தாந்த வெறி எர்ணா பெற்றி என்ற நாசி கொலையாளி

Viduthalai
2 Min Read

அரசியல், ஞாயிறு மலர்

இந்தப் பெயரை, நீங்கள் அறிந்திருக்கக் கூடும். நாசி கொள்கையையும், சித்தாந் தத்தையும் தனது குருதி நாளங்களில் செலுத்திக் கொண்டவள்.

இவள், ஒரு ஜெர்மன் நாசி காவல்துறை அதிகாரியின் மனைவி. இரண்டு குழந்தைகளின் தாய். தனது கணவன், குழந்தைகளோடு கிழக்கு ஜெர்மெனியில் வாசம். 1942ஆம் ஆண்டு.. ஒரு கோடைக் காலம்… Erna Petri ஷாப்பிங் முடித்துவிட்டு திரும்பி வரும் போது, கிழிந்த ஆடைகளுடன், பசி காரணமாக சோர்ந்து, அச்சத்தில் உறைந்து போன ஆறு(6) குழந்தைகளைக் கண்டாள்.

உண்மையில் அந்தக் குழந்தைகள், சாலையில் நடக்க முடியாமல் ஊர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்; ஆறிலிருந்து, பனிரெண்டு வயது வரை இருக்கலாம் அந்த குழந்தைகளுக்கு.

யூதர்களைக் கடத்தும் டிரக்கிலிருந்து தப்பித்து வந்த யூதக் குழந்தைகள் தான் அவர்கள் என்பதை புரிந்து கொண்டாள் எர்ணா பெற்றி. அந்த குழந்தைகளை, தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றாள் அவள். அங்கே, அவர்களுக்கு சுவையான உணவு வகைகளை கொடுத்து, சொகுசான படுக்கையில் தூங்க வைத்தாள்.

தனது கணவனின் வருகைக்காக காத்திருந்தாள் அவள். வழக்கமாக அவளது கணவன் வரும் நேரம் கடந்து சென்று விட்டது. அதற்கு மேல் அவளால், காத்திருக்க முடியவில்லை. அவளது சித்தாந்தம், அவளை அதற்கு மேல் காத்திருக்க அனுமதிக்கவில்லை.

தனது தந்தை தனக்கு பரிசாகத் தந்த கைத்துப்பாக்கியை எடுத்தாள் எர்ணா பெற்றி;வயிறார சுவையான உணவுகளை உண்ட மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த யூதக் குழந்தைகளை தட்டி எழுப்பி, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச்சென்றாள் அவள்.

அந்த இடம், அவளது கணவன், யூதர்களை சுட்டுக்கொலை செய்யும் இடம். அங்கே. தூக்கக் கலக்கத்தில் நின்று கொண்டிருந்த குழந்தைகளை வரிசையாக நிறுத்தினாள் அவள், ஒவ்வொரு குழந்தையாக! கழுத்தின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுட்டு,ஆறு குழந்தைகளையும் கொன்று தள்ளினாள் அவள். (Erna Petri)

கிழக்கு ஜெர்மன் நீதிமன்றத்தில்,எர்ணா பெற்றி, அவளது கணவன் இருவர் மீதும் வழக்கு விசாரணை நடந்தது; அப்போது நீதிபதி கேட்டார். “இரண்டு குழந்தைகளுக்கு தாயான உனக்கு, எப்படி ஆறு குழந்தைகளை கொல்ல முடிந்தது?உனது கைகள் நடுங்க வில்லையா?”

“இல்லை; ஒரு நொடி கூட எனது கைகள் நடுங்கவில்லை;அதை எனது சித்தாந்தம் அனுமதிக்கவில்லை”என்றாள் எர்ணா பெற்றி..

இறுதியில் அவளது கணவனுக்கு தூக்குத் தண்டனையும், அவளுக்கு 30ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளித்தது நீதிமன்றம். சிறை வாசத்திற்கு பிறகு வெளியே வந்த எர்ணா பெற்றி என்ற அந்த நடுங்க வைத்த நாசி கொலையாளி 2000இல் இறந்து போனாள்.

எர்ணா பெற்றி, இறந்து போனாலும் கூட, அவள் இப்போதும் நாசிச, பாசிச சித்தாந்தங்களை உள்வாங்கிய வேறு நபர்களின் உருவில் – பெயரில் இன்றும் நமது நாட்டில் நடமாடுகிறாள்.

இந்தக் கொள்கையைத்தான் 

Dr.முஞ்சே இத்தாலி, ஜெர்மனிக்குச் சென்று வந்து இங்கே விதைத்துள்ளார். பாபு பாஜிரங்கி கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை திரிசூலத்தில் குத்தி வெளியே எடுத்த கொடூரம் (குஜராத் கலவர வாக்குமூலம்)அந்த விதையின் வளர்ச்சி தானே.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *