கேரளா: நவீன தொழில்நுட்பம் உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கேரளாவில் உள்ள ஒரு தனியார் கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள “டிஜிட்டல் ‘தீர்த்த’ இயந்திரம்” சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கோவில்களில் அர்ச்சகர்கள் சிறிய கரண்டி மூலம் பக்தர்களின் கைகளில் தீர்த்தம் வழங்குவது வழக்கம். ஆனால், இந்தக் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரமானது, சென்சார் (Sensor) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
பக்தர்கள் இயந்திரத்தின் முன் கையை நீட்டினால் தானாகவே தீர்த்தம் வழிகிறது. கையை எடுத்தவுடன் நீர் வருவது நின்றுவிடுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் பொதுக் கழிவறைகளில் சிறுநீர் கழித்த பின் தானாக நீர் வரும் (Urinal Sensors) அதே தொழில்நுட்பத்தைப் போலவே இருப்பதால், பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
‘புனிதம்’ கெடுகிறதா?: கழிவறைகளில் பயன்படுத்தப் படும் அதே சென்சார் நுட்பத்தை, ‘புனித’மாக கருதப்படும் ‘தீர்த்தம்’ வழங்கப் பயன்படுத்துவது பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.
ஏஅய் (AI) தொழில்நுட்பம் மூலம் வருங்கால சந்ததியினரின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து வீடுகளில் வசதிகளை ஏற்படுத்தும் அளவிற்கு உலகம் முன்னேறிவிட்டது. ஆனால், மூடநம்பிக்கை மூலம் கொள்ளையடிப்பது குறையவில்லை. கோயிலில் சிலையை உண்மை எனக் காட்டி தீர்த்தம் என்கிற பேரில் ஒரு சிறிய கரண்டியில் ஊற்ற வேண்டிய தண்ணீருக்குக் கூட சோம்பேறித்தனம் கொண்டு இயந்திரம் பயன்படுத்துகின்றனர்.
“சிறுநீர் கழிக்கப் பயன்படும் அதே தொழில்நுட்பத்தில் தீர்த்தம் வருவது வெறுப்பாகவும், வருத்தமாகவும் உள்ளது” என்று பக்தர்கள் கவலைப் படுகிறார்களாம்!
