புதுடில்லி, பிப்.19 டில்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் ஓர் அரங்கம் நொய்டாவில் உள்ள கல்கோடியாஸ் என்ற தனியார் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஒருவர், ‘ஓரியான்’ என்ற ரோபோட்டிக் நாயைக் காட்சிக்கு வைத்திருந்தார். இது தங்கள் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு மய்யத்தில் உருவாக்கப்பட்டது என்று கூறி, அதன் சிறப்பம்சங்களைப் பார்வையாளர்களுக்கு விளக்கினார்.
ஆனால், உண்மையில் இது சீனாவின் ‘யுனிட்ரீ’ என்ற நிறுவனத்தின் ‘ஜிஓ2’ என்ற ரோபோட்டிக் நாய். இது ஆன்லைனில் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை விற்கப்படுகிறது. இதற்கு ‘ஓரியான்’ எனப் பெயரிட்டு, கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் தங்களின் சொந்தத் தயாரிப்பு என ஏஅய் கண்காட்சியில் விளம்பரப்படுத்தியுள்ளது. இதைச் சீன ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ஏஅய் உச்சி மாநாடு திட்டமிடப்படாத விளம்பரக் கேலிக்கூத்து. இங்கு இந்தியத் தரவுகள் விற்கப்படுகின்றன. சீனத் தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவைக் கேலிக்கூத்தாக்கிவிட்டது மோடி அரசு” எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பான காணொலி பரவலானது. இதைத்தொடர்ந்து, டில்லி கண்காட்சி அரங்கைக் காலி செய்யும்படி கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடப் பட்டது.
