சென்னை, பிப்.14–- பிப்ரவரி 23ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
ரோப் கார் திட்டத்துக்காக
சென்னை மெரினா கடற்கரையில் மண் பரிசோதனை!
சென்னை, பிப்.14- சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரையில் ரோப் கார் சேவையை கொண்டுவர சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. 2022ஆம் ஆண்டு முதல் இதற்கான ஆலோசனைகளும், ஆய்வு பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
ரோப் கார்
இந்த நிலையில், முதற்கட்டமாக உழைப்பாளர் சிலை முதல் கலங்கரைவிளக்கம் வரையில் ரோப் கார் திட்டப் பணிகளுக்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க கடந்த 2024ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் கோரியது. இதையடுத்து, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில், ரோப் கார் திட்டத்துக்காக மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில் தனியார் நிறுவனம் சார்பில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 30 அடி அளவில் பள்ளம் தோண்டி பணிகளை மேற்கொண்டனர்.
இந்த பணி குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த நொச்சிக்குப்பம் மீனவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களிடம், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி இல்லாமால் கடற்கரையில் எப்படி பணிகளை மேற்கொள்ள முடியும்? என கேள்வி எழுப்பியவாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மண் பரிசோதனையில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் பணிகளை நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மெரினா கடற்கரையில் வர இருக்கும் ரோப் கார் திட்டத்துக்காக தனியார் நிறுவனம் சார்பில் மண் பரிசோதனை பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பணியை திடீரென மீனவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். எனவே, அடுத்த கட்டமாக காவல் துறையினர் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மண் பரிசோதனை செய்து, அந்த அறிக்கையை கடலோர ஒழுங் குமுறை ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்” என்றனர்.
தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
சென்னை, பிப். 14- தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் காகம் ஒன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து, மற்ற காகங்களும் சோர்வுடன் காணப்பட்டதால் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில், இறந்த காகத்திற்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்களைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவுரைகள்:
அச்சம் வேண்டாம்
பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
உங்கள் பகுதியில் காகங்களோ அல்லது இதரப் பறவைகளோ இறந்து கிடந்தால், உடனடியாக அருகில் உள்ள கால்நடைத் துறைக்கும் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சுகாதார எச்சரிக்கை
காய்ச்சல், சளி அல்லது மூச்சு விடுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை முழுமையாக, நன்றாகச் சமைத்த பின்னரே உண்ண வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
உதவி மய்யம்
பறவைக் காய்ச்சல் தொடர்பான சந்தேகங்களுக்கு ‘104’ என்ற 24 மணிநேர இலவசத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்கள் அரசின் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
