புதுடில்லி, பிப்.9 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது தொடர்பான புகார், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று டில்லி நீதிமன்றத்தில் சோனியா காந்தி பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தனது பெயரை இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு முன்பே முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாகக் கூறி, வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி தாக்கல் செய்த மனுவை டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் திரிபாதி சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சோனியா காந்திக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, சோனியா காந்தி தாக்கல் செய்த பதில் மனுவில், “வாக்காளர் பட்டியலில் எனது பெயர் முறைகேடாக சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறுவது தவறானது. இந்தப் புகார் அடிப்படை ஆதாரமற்றது. அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் தவறாக வழிநடத்துவது’’ என்று கூறியுள்ளார்.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி துரோகக் கூட்டணி
கனிமொழி எம்.பி.
விருதுநகர், பிப்.9 விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டல தி.மு.கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.
அதில், “தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கூட கொடுக்க மாட்டேன் என்று கூறும் துரோக கூட்டணி நமக்கு எதிராக உள்ளது. தமிழ் நாட்டு மாணவர்களுக்கு நிதி கொடுக்க மாட்டேன் என்று கூறும் துரோகக் கூட்டணி யோடு அதிமுக கைகோர்த்துள்ளது. உத்திரப்பிரதேசம், மராட்டியம், குஜராத் துக்கு அள்ளிக்கொடுக்கும் பாஜக, தமிழ் நாட்டுக்கு கிள்ளிகூட கொடுப்பதில்லை. துரோகத் தோடுதான் கைகோர்த்து ஒரு கூட்டணி நமக்கு எதிராக இருக்கிறது,” இவ்வாறு தெரிவித்தார்.
செல்போன்மீதான வெறித்தனம்
சிறுமிகள் மூவரின் உயிரைப் பறித்தது
காசியாபாத், பிப்.9 உத்தரப் பிரதேசம் காசியாபாத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் ‘கொரியன் லவ் கேம்’ என்ற இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி கடந்த வாரம் 9-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து அவர்களின் தந்தை கூறும்போது, ”எனது மகள்கள் கொரிய நாடகங்கள், விளையாட்டுகள் மற்றும் ரீல்ஸ் ஆகியவற்றில் தீவிரமாக மூழ்கியிருந்தனர். அதனால் அவர்களிடம் இருந்து கைப்பேசிகளைப் பிடுங்கி வைத்தேன். அது குற்றமா? கைப்பேசியைப் பறித்ததால் அவர்கள் கோபமாக இருந்தனர். குழந்தைகளின் நலன் கருதி கைப்பேசியைப் பறிப்பது பாவமா?” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
