சென்னை, பிப். 7- அண்ணா பல்கலைக்கழகத் துறை சார்கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி, அழகப்பா தொழில் நுட்பக்கல்லூரி, குரோம்பேட்டை எம்அய்டி ஆகியவற்றில் பிஇ, பிடெக், பிஆர்க் படித்த மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா விவேகானந்தர் அரங்கில் 5.2.2026 அன்று நடைபெற்றது.
பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் தலைமை வகித்தார். எம்அய்டி முன்னாள் மாணவரும், அசோக் லேலண்ட் முதுநிலை துணைத் தலைவருமான கிருஷ்ணன் சடகோபாலன் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
இவ்விழாவில் அமைச்சர் கோவி.செழியன் பேசும்போது. “இங்கு பட்டம் பெற்ற மாணவர்களில் 1,800 பேர் முதல் பட்டதாரிகளாக பட்டங்களைப் பெறுவது மகிழ்ச்சி. நான்கூட முதல் தலைமுறை பட்டதாரிதான். பிற மாநிலங்களில் பெயருக்குப் பின்னால் ஜாதி மற்றும் மத அடையாளங்களை போட்டுக் கொள்வதுதான் வழக்கமாக இருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் பெயருக்குப் பின்னால், படித்த பட்டங்களை போட்டுக் கொள்வது வழக்கமாக உள்ளது” என்றார்.
துணைவேந்தர் நியமனம்
இந்நிகழ்வில், பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், உயர்கல்வித் துறை செயலருமான பொ. சங்கர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.விசாகன், பல்கலைக்கழக பதிவாளர் வி.குமேரசன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.சக்திவேல், ஒருங் கிணைப்புக் குழுவின் உறுப்பினரும், ஏரோஸ்பேஸ் பொறியியல் துறை பேராசிரியருமான பி.டி.என்.சிறீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழா முடிந்த பிறகு செய்தி யாளர்களிடம் அமைச்சர்
கோவி.செழியன் கூறும்போது, “தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில், மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர். இதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார்” என்றார்.
முன்னதாக நடைபெற்ற எம்.இ., எம்.டெக். மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழாவில், பிரமோஸ் ஏரோஸ்பேஸ் மேனாள் டைரக்டர் ஜெனரல் அதுல் தின்கர் ராணே பேசும்போது, “சமூக மேம்பாட்டில் பொறியியலுக்கு முக்கியபங்கு உண்டு. ஏஅய். மெஷின் லேர்னிங் என மேம்பட்ட தொழில் நுட்பங்கள் உருவாகி வருகின் றன. இதில் நிபுணத்துவம் பெற பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆர்வமும், தொடர் கற்றலும் அவசியம்” என்றார்.
