மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த அதிகாரிகள் – அதிகார போதை தலைக்கேறினால் எந்தவொரு அக்கிரமத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதற்கு உதாரணம்.
02.02.1976 அன்று சென்னை மத்திய சிறையில் அரசியல் கைதிகளுக்கு நடந்த கொடூரம் – சில தகவல்கள்:
12.06.1975 அன்று பிரதமர் இந்திராவின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி செல்லாது என்று ராஜ்நாராயணன் தொடுத்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார். உச்ச நீதிமன்றம் சென்ற இந்திராவுக்கு முழுமையான வெற்றி கிட்டவில்லை.
இந்திரா பதவி விலக ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.
தொடர் நெருக்கடியைச் சமாளிக்க ஜூன் 25ஆம் தேதி 352ஆவது பிரிவின் கீழ் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்தார் இந்திரா.
அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் நெருக்கடி நிலைக்கால நிழல் கூட படாமல் கலைஞர் பார்த்துக் கொண்டார். வட இந்தியத் தலைவர்களும் தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.
மிசாவுக்கெதிரான கூட்டங்கள் தமிழ்நாடு எங்கும் நடத்தப்பட்டன.
02.10.1975 அன்று பெருந்தலைவர் காமராஜர் மரணம்
1976 ஜனவரி 30இல் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டது. ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு தவே, சுப்ரமணியம் ஆகிய இருவர் ஆளுநரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். அதிகாரிகள் மெல்ல மெல்ல தங்கள் அதிகாரப் பசிக்கு அரசியல்வாதிகளை வேட்டையாட ஆரம்பித்தனர்.
01.02.1976 அன்று தமிழ்நாடு முழுக்க திராவிடர் கழகம், தி.மு.க., ப.காங், சிபிஎம் போன்ற கட்சிகளின் தொண்டர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர் கி.வீரமணி, முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, மேயர் சிட்டிபாபு, விடுதலை சம்பந்தம் என்று எண்ணற்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இரவில் கைது செய்யப்பட்டவர்கள் சென்னை மத்திய சிறையில் ஓர் இருட்டான அறையில் அடைக்கப் பட்டனர். ஒருவர் மேல் ஒருவர் தள்ளப்பட்டு கீழே விழுந்த போது பிசுபிசுப்பாக ஏதோ ஒட்டிக் கொண்டு லேசான துர்நாற்றமடித்தது. அடுத்த நாள் காலை அறைக்கதவு 10 நிமிடம் திறக்கப்பட்டு மலஜலம் கழிக்க அனுமதிக்கப்பட்டனர். தங்கள் உடலில் ஒட்டியிருந்தது சீழ், இரத்தம் படிந்த பஞ்சு என்பதும் தொழுநோயாளிகள் அடைக்கப்பட்டிருந்த அறையில் அடைக்கப் பட்டிருந்தோம் என்பது தெரியும் முன்பே மீண்டும் அதே அறையில் அடைக்கப்பட்டனர்.
உணவு கிடையாது, வசவுகள் அதிகம் கிடைத்தது. அன்று இரவு சிறையதிகாரி வித்யாசாகர் தலைமையில் வந்த காவலர்களும், தண்டனைக் காவலர்களும் ஒவ்வொருவரையும் அடித்துத் துவைத்தனர்.மு.க, ஸ்டாலின் கை உடைக்கப்பட்டது. ஆசிரியர் கி.வீரமணி மூக்கும், வலது கண்ணும் பலமாகத் தாக்கப்பட்டது. வீராசாமிக்கு அடித்த அடியில் காது செவிடானது. முரசொலி மாறன் நெஞ்சிலும் தலையில் அடி, விடுதலை சம்பந்தத்துக்கு முதுகு தண்டுவடத்தில் அடி.
முரசொலி அடியார் வயிறு கிழிந்து குடல் வெளியே வந்தது. அடி வயிற்றில் ஷூ கால்கள் பதம் பார்த்ததில் மேயர் சிட்டிபாபு மரணம். எண்ணற்றவர்கள் உடல் உபாதையால் பாதிப்பு . சிறை மீண்ட பின்பு மரணமடைந்தவர்கள், நிரந்தரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் பலர்.
ஒரு பானையில் தண்ணீர் குடிக்க வேண்டும்; மற்றொரு பானையில் சிறுநீர் கழிக்க வேண்டும். கண்ணெதிரே சோற்றில் மண்ணைக் கொட்டி கொடுத்தனர்.
ஒரு மாதத்திற்கு உறவினர்கள் பார்க்க அனுமதியில்லாததால் போட்டிருந்த அதே உடைகள் உள்ளாடைகளுடனே காலம் கழிக்க வேண்டிய சூழல்.எப்போது விடுதலை ஆவோம் என்று தெரியாத நிலை.
ஒரு வழியாய் 1977 மார்ச் மாதம் மிசாக் கைதிகள் விடுதலையானார்கள். ஜனதா ஆட்சியில் நீதிபதி ஷா ஆணையமும், தமிழ்நாட்டில் நீதிபதி இஸ்மாயில் ஆணையமும் நெருக்கடி நிலைக் கொடுமைகள் அத்துமீறல்கள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்டது.
நீதிபதி இஸ்மாயில் முன்பு வழக்குரைஞர்கள் சந்துரு,
எஸ்.துரைசாமி, பாளை சண்முகம் ஆஜராகி சிறை அதிகாரிகள் நடத்திய கொடுமைகளை ஆதாரத்துடன் நிரூபித்தனர். ஆணைய அறிக்கை வெளியிடவேண்டி ஆசிரியர் கி.வீரமணி போராட்டம் நடத்தினார்.
மனித உரிமைகள் பற்றி விழிப்புணர்வு இல்லாத காலகட்டத்தில் நடந்த அந்தக் கொடூரத் தாக்குதல் பற்றி “சிட்டிபாபுவின் டைரி, நெஞ்சுக்கு நீதி பாகம் 2, அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 5” மற்றும் பல நூல்களும் நீதிபதி இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையும், தி.க., தி.மு.க., முன்னணியினரும் ஆவண மற்றும் உலவும் சாட்சிகளாக உள்ளனர்.
