வல்லம், பிப்.6- தஞ்சாவூரிலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (PMIST) விண்வெளி பொறியியல் துறை மற்றும் மதுரை ஆரா ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியான “Flight of Thousand Dreams” என்ற நிகழ்வு 2026 பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 2,000 மாணவர்கள், தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், திருச்சி மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து வந்து, இந்த சாதனை முயற்சியில் பங்கு பெறுவார்கள் இவர்கள் அனைவரும் இணைந்து 1,000 கைமுறையில் தயாரிக்கப்பட்ட கிளைடர்களை இந்த திறந்தவெளி மைதானத்தில் ஒரே நேரத்தில் பறக்க விட உள்ளனர். இது கிளைடர் விமானங்களை பறக்க விடும் நிகழ்ச்சி மட்டும் அல்ல. மாணவர்களின் கனவுகள், தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் கூட்டுச் சாதனைகளை உலகிற்கு பறைசாற்றும் விழாவாக உருவாக்கப்பட்டுள்ளது.
2026 பிப்ரவரி 7 ஆம் தேதி, ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் இந்திய சாதனைப் புத்தகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ சரிபார்ப்புடன், முன்பு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட 657 கிளைடர்கள் என்ற உலகச் சாதனையை முறியடித்து, புதிய தேசிய மற்றும் ஆசிய சாதனையை PMIST உருவாக்க உள்ளது.
இந்த சாதனை, தமிழ்நாட்டின் உயர்கல்வி சூழலின் உண்மையான நிலையை பிரதிபலிக்கிறது அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், தொழில் துறை மற்றும் இளம் மாணவர்கள் ஒன்றிணைந்து உலகளாவிய தாக்கத்தை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தும் விதமாக அமையும்
தமிழ்நாடு அரசு, ஸ்டெம் (STEM) கல்வி, புதுமை, ஆராய்ச்சி மற்றும் தொழில் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் இளம் வயதிலேயே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி, பாடப்புத்தகங்களைத் தாண்டி வடிவமைக்க, உருவாக்க, புதுமைகள் செய்வதற்கு மாணவர்களை ஊக்குவிக்கின்றன.
இந்நிகழ்ச்சியை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் துவக்கி வைக்க இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி டி.கே.சுந்தரமூர்த்தி, இஸ்ரோ, பெங்களூர் மற்றும் முனைவர் அபிஜித் தேவானந்தம், டிஅய்ஹெச், அய்அய்டி திருப்பதி, சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
