பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவராக ஒரு ‘‘ட்ரம்மர் பாய்’’ (Drummer Boy)போல, நித்தியமும் ஊடகங்களின் வெளிச்சத்தில் 24 மணிநேரமும் ஏதாவது ஒன்றை அளந்து விட்டே அரசியலில் விளம்பர வியாதிக்கு ஆளானவர் அய்.பி.எஸ். அண்ணாலை!
தமிழ்நாட்டின் முதலமைச்சர் கனவில் ஒரு காலத்தில் மிதந்து நனைந்தவர் – காயப் போட்டுள்ளார் இப்போது!
எவரையும் எகத்தாளமாக எடுத்தெறிந்து – பேசு, புண்–ணாக்கு படைத்த அரசியல்வாதி என்பதுதான் அவரது தனித்தன்மை!
அவருக்கு இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு பரிதாபத்திற்குரிய நிலை ஏற்படும் என்று எவரும், அவரும்கூட– எண்ணிக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.
திடீரென்று சாட்டையால் அடித்துக் கொண்டு அரசியல் ‘சித்து’ விளையாடுவார்!
அப்புறம், ‘‘பால் பண்ணை அதிபராகப் போகிறேன்; விவசாயம் என்னை ஈர்க்கிறது’’ என்ற ஒரு புது வியூகம் கூறுவார்!
தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் பதவி யிலிருந்து இவரை விலகச் செய்த நிலை யிலும், மீண்டும் அத்தலைமைக்கு எதி ராகவோ என்னவோ ‘‘போட்டி, பேட்டி, போட்டி கோஷ்டிகளை’’ வைத்து ஊடக வெளிச்சத்தினை நாளும் நாடுவார், தேடுவார்! டில்லிக்கு ஓடுவார்!!
திடீர் ‘குண்டு’களைப் போடத் தயங்காத அரசியல் தலைவர்!
சம்மன் இல்லாமலேயே சில இடங்களில் ஆஜராகி, ‘‘தனது ஆலோசனையை அவர்கள் கேட்டே முடித்தனர்’’ என்று முண்டா தட்டுவார்!
இவரை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்த லில், ஆறு தொகுதிகளுக்கு ஒருவர் ‘‘பார்மூலா’’படி, நியமித்து 67 ஆவது நாயன்மாராக்கிவிட்டார் புதிய தலைவர் நயினார்!
பொறுக்க முடியாமலோ என்னவோ ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
அந்த 6 தொகுதிகளின் கண்கா ணிப்புக்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்று பதவி விலகலை அனுப்பியதோடு,
தனது அப்பாவின் உடல்நிலையை அருகே இருந்து கவனிக்கத் தனக்கு அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறி, விலகிக் கொள்கிறேன் என்று ‘விண்ணாரம்’ கொட்டுகிறார், இப்போது!
இதுபற்றி ‘இனமலர்’ ஏட்டில் ஒரு செய்தி, ஒரு சிறு ‘கார்ட்டூன்’ மூலமும் செய்தி எப்படி வெளியிட்டுள்ளது பாருங்கள்!
அதுமட்டுமா?
அச்செய்திக்கு அவ்வேடு கொடுத்தி ருக்கும் தலைப்பு எப்படி உள்ளது எனவும் பாருங்கள்!
‘‘தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகல்
பா.ஜ.க. மற்றும் தே.ஜ. கூட்டணியில் சலசலப்பு’’
இதுவும் – ‘குரு’ஸ்நானம் வகிக்கும் ‘மூர்த்தி’க்கும் இதில் பங்கு இருக்குேமா?
‘வேம்புகளுக்கும், வீம்புகளுக்கும், இந்த வம்புகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று சில வட்டாரங்கள் அலசி, அலசி ஆராய்வதாகத் தெரிகிறது!
ரொம்ப உயரத்திலிருந்து விழுந்தால் எப்போதும் அடியும், காயமும் பலமாக இருப்பது இயல்புதானே!
அப்பா, கவலை தப்பா போகுமா?
டப்பா எஞ்ஜின்காரர்கள்தான் விடை காண வேண்டும்!
அந்தோ பரிதாப ‘அய்யோ- மலை!’
