புதுடில்லி, பிப்.4 இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுபவை இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (The Indian Institutes of Management – IIMs). ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த நிறுவனங்களின் ஆசிரியர் பணியிடங்கள் குறித்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சியையும், சமூக நீதி குறித்த பல கேள்விகளையும் எழுப்பி யுள்ளன.
பகிரப்பட்ட தரவுகளின்படி, அய்.அய்.எம் அகமதாபாத், கல்கத்தா, இந்தூர் மற்றும் ஷில்லாங் ஆகிய முக்கிய நான்கு நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினத்தவர் (ST) ஆகியோரின் பிரதிநிதித்துவம் பின்வரு மாறு:
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC): 0%
பட்டியலினத்தவர் (SC): 0%
பழங்குடியினத்தவர் (ST): 0%
பொதுப் பிரிவு / முன்னேறிய வகுப்பினர் (General/UC): 100%
அதாவது, இந்த நான்கு நிறுவனங்க ளிலும் சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒரு ஆசிரியர் பணியிடம் கூட வழங்கப்பட வில்லை என்பது இந்த அட்டவணையின் மூலம் தெளிவாகிறது. அய்.அய்.எம் பெங்க ளூரு, கோழிக்கோடு மற்றும் லக்னோ போன்ற நிறுவனங்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே பிரதிநிதித்துவம் உள்ளது.
இந்திய மக்கள்தொகையில் சுமார் 90% இடத்தைப் பிடித்துள்ள இந்த மண்ணின் மைந்தர்களாக இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின சமூகத்த வர்களுக்கு நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ‘‘பூஜ்ஜியம்’’ சதவீத இடங்களே கிடைத்துள்ளன என்பது மிகப்பெரிய ஜனநாயகத் தோல்வியாகும். கல்வி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். ஆனால், நிர்வாகத் துறையின் உச்சமாகப் பார்க்கப்படும் இந்த நிறுவனங்கள், குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் ஆதிக்கத்தோடு மட்டுமே இயங்குவது ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற கோட்பாட்டிற்கு முரணானது.
பெரும்பாலும் இத்தகைய இட ஒதுக்கீடு விவகாரங்களில் ‘தகுதி மற்றும் திறமை’ என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. 90% சதவீத மக்கள் தொகையில் இருந்து ஒரு தகுதியான நபர் கூட இந்த நிறு வனங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது நம்பக்கூடியதாக இல்லை. இது திட்டமிட்ட புறக்கணிப்பா அல்லது உள்நோக்கம் கொண்ட அதிகாரப் பரவலா என்ற சந்தேகம் எழுகிறது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு என்பது ஒரு சலுகையல்ல, அது பிரதிநிதித்துவம். கல்வி நிறுவனங்களில் பன்முகத்தன்மை இல்லையென்றால், அங்கு பயிலும் மாணவர்களுக்குச் சமூக எதார்த்தங்கள் புரியாமல் போகும் வாய்ப்புள்ளது. ஒன்றிய அரசும், கல்வி அமைச்சகமும் தலையிட்டு, இந்த உயரிய நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், ‘சமூக நீதி’ என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே எஞ்சி நிற்கும்.
