அயப்பாக்கம், பிப்.2– திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம் அயப்பாக்கம் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் 64 துணை சுகாதார நிலையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையின்ர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர். கிராம சுகாதார நிலைய செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்களையும் வழங்கினர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
துணை சுகாதார நிலையங்கள்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு. 708 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள். 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிதாக ரூ.1,078 கோடி மதிப்பீட்டில் 19 இடங்களில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 4 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு திருத்தணி போன்ற இடங்களில் உள்ள மருத்துவமனைகள் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளன.
வருகிற 6ஆம் தேதி முதலமைச்சர் ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, இராஜபாளையம், அருப்புக்கோட்டை, குளித்தலை, காங்கேயம், திண்டிவனம் ஆகிய 7 இடங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரூ.229.24 கோடி மதிப்பீட்டிலான புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார். அதேபோல் ரூ.104 கோடி செலவில் கட்டப்பட்ட 23 இடங்களில் மருத்துவக் கட்டமைப்பும் திறந்து வைக்கப்பட உள்ளது. அதில் ஒன்று இந்த மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை. அதோடு மட்டுமல்லாமல், ரூ.11.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட உள்ளது. சென்னை கிண்டியில் ஒரு உணவு பகுப்பாய்வு கூடத்தில் நுண்ணுயிரியியல் ஆய்வகம், அதேபோல் மதுரையில் ஒரு நுண்ணுயிரியல் ஆய்வகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட உள்ளது. முதலமைச்சர் 6ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ரூ.359.46 கோடி மதிப்பிட்டிலான 42 புதிய மருத்துவக் கட்டமைப்புகளை காணொலி மூலம் திறந்து வைக்கிறார். மருத்துவத்துறை வரலாற்றில் இது மிகப் பெரிய சாதனையாக அமையும்.
மருத்துவர்களின் போராட்டம் குறித்து அவர்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 40க்கும் மேற்பட்ட முறையில் அவர்களுடன் கடந்த 4.5 ஆண்டுகளில் பேச்சுவார்த்தை நடத்தி ஏராளமான சலுகைகளை வழங்கி இருக்கிறோம். அண்மையில் மதுரையில் ஒரு மிகப் பெரிய அளவில் பாராட்டு விழா மதுரையில் நடத்தப்பட்டது. தற்போது போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களையும் அழைத்துப் பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணயன் கூறினார்.
