புதுடில்லி, ஜன.29- தேசிய தோ்வுகள் வாரியம் சார்பில் நடத்தப்படும் முதுநிலை நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வு வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடப்படாததற்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
முதுநிலை நீட் தோ்வு
முதுநிலை நீட் தோ்வில் தோ்வா்களுக்கு வெவ்வேறு விதமான வினாத் தாள்கள் வழங்கப்படும் நிலையில், தோ்வு முடிந்த பிறகு வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடுவதன் மூலம், தோ்வா்கள் தங்களின் தகுதியை சரிபார்க்க ஏதுவாக இருக்கும்.
எனவே, மற்ற போட்டித் தோ்வுகளில் பின்பற்றப்படுவது போன்று, முதுநிலை நீட் தோ்விலும் இந்தத் தரவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமா்வில் நேற்று முன்தினம் (27.1.2026) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேசிய தோ்வுகள் வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘வினாத் தாள்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும், அரிதான தேசிய சொத்தை பாதுகாக்கவும், வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடப்படாத நடைமுறை பின்பற்றப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதைப் பரிசீலித்த நீதிபதிகள், ‘வினாத் தாள் மற்றும் விடைக் குறிப்புகள் வெளியிடப்படாததை நியாயப்படுத்துவதற்கு மேலும் தெளிவான விளக்கத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எனவே, இந்த விவகாரம் விரிவாக விசாரிக்கப்படும்’ என்றனா்.
