நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுப்பு
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
புதுடில்லி, ஜன.28 விபி-ஜி ராம்ஜி (VP-G RAMJI) சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (28.1.2026) தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று (27.1.2026) நடைபெற்றது. நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மைக் குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில், கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கியப் பிரச்சினைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையைச் சுமூகமாக நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அனுமதிக்க முடியாது
இந்தக் கூட்டத்தின் போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் திற்கு மாற்றாக ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ‘விபி ஜி ராம்ஜி’ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு:
“சட்டம் ஒருமுறை நிறைவேற்றப் பட்டு நாட்டு மக்களின் முன் வந்து விட்டால், நாம் அதைப் பின்பற்ற வேண்டும். நம்மால் பின்னோக்கிச் சென்று கடந்த காலத்திற்குத் திரும்ப முடியாது; அது நடக்காது. மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். நமக்கு பேச்சு சுதந்திரம் உண்டு, ஆனால் (அரசு சொல்வதைக்) கேட்பதும் நமது கடமையே,” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின்
கோரிக்கை நிராகரிப்பு
இதனைத் தொடர்ந்து, இந்தச் சட்டம் மற்றும் எஸ்அய்ஆர் (SIR) பிரச்சினை ஆகியவை குறித்து நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த ஒன்றிய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், இந்தக் கோரிக்கையையும் ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.
எஸ்அய்ஆர் தொடர்பாக ஏற்கனவே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டுவிட்டதால், மீண்டும் ஒருமுறை விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் இந்த நிலைப் பாட்டைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், எஸ்அய்ஆர் பிரச்சினை, பொருளாதாரக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்றவை குறித்துப் பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
