வல்லம், ஜன. 19- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு சார்பாக மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பாபநாசம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பட்டுக்கோட்டை எஸ்.டி.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மூன்றாமாண்டு சுமார் 525 மாணவ, மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பாக விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி 13.01.2026 அன்று வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.முரசொலி வாழ்த்துரை வழங்கி பேசும்போது மாணவர்கள் அனைவரும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் தமிழர்களுக்கு கல்வியையும், சுயமரியாதையும் அளித்து அவர்களின் சமூக மேம்பாட்டுக்காக பாடுபட்டார்கள் என்று கூறிய அவர் சினிமாவை பொழுதுபோக்கிற்கு மட்டும் பார்க்க வேண்டும் என்றும், அதனை வாழ்க்கையின் பாதையாக தேர்ந்தெடுக்கக் கூடாது என்று குறிப் பிட்டார். மாணவர்கள் அரசியல் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அறிவுசார் ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும் அவர் கூறுகையில், உலகின் அறிவார்ந்த மேதைகளான கார்ல் மார்க்சும், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் கொள்கைகளைத் தான் ஒருவரின் வாழ்க்கை வழிகாட்டியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறிய அவர் மாணவர்கள் அனைவரும் விலையில்லா மடிக்கணினிகளின் துணையோடு புதிய நவீன தொழில்நுட்பங்களை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் மற்றும் நான் முதல்வன் ஆகிய திட்டங்களின் வாயிலாக புதிய நவீன தொழில்நுட்பங்களை இலவசமாக மாணவ, மாணவிகள் கற்றுக் கொள்கிறார்கள். அனைவரும் அரசியலைப் புரிந்து ஆட்சி அமைப்பை அறிந்து மக்களாட்சியின் மாண்பை, கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப் பிட்டார். வல்லம், பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாண சுந்தரம் விழாவில் கலந்து கொண்டார். விழாவில் முன்னதாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பாபநாசம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பட்டுக்கோட்டை எஸ்.டி.எஸ். பாலி டெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இக்கல்லூரியின் முதன்மையர் ஜி.இராஜாராமன் விழாவில் கலந்து கொண்டார். பேராசிரியர் ஆர்.அய்ய நாதன் மற்றும் இயந்திரவியல் துறைத் தலைவர் எல்.விவேக்நிஜந்தன் ஆகியோர் இவ்விழாவை ஒருங்கிணைத்தனர்.
மூன்று பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனை வருக்கும் 525 விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்பட்டது. டெல் நிறுவன தொழல்நுட்ப வல்லுநர்கள் மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.
