கொல்கத்தா, ஜன. 17- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் மேற்கு வங்காளத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், விடுபட்டவர்கள் பெயர்களைச் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திருத்தப்பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (பிஎல்ஓ) நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே தங்களது வழக்கமான பணிகளை கவனித்து வரும் நிலையில், இந்த கூடுதல் பணியால் கடும் பணிச்சுமை ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்னாகஸ் மாவட்டம் முகுந்தபூரைச் சேர்ந்த அசோக் தாஸ் என்ற பள்ளி ஆசிரியர் நேற்று (16.1.2026) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜாய் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், தேர்தல் பணிகளுக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலராகவும் செயல்பட்டு வந்தார்.
குடும்பத்தினர் குற்றச்சாட்டு
அசோக் தாஸின் மரணத்திற்கு அதிகப்படியான பணிச்சுமையே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் பணி தொடர்பான நெருக்கடிகளால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10ஆம் வகுப்பு போதும்… ஆதார் துறையில் வேலை!
புதுடில்லி, ஜன.17- இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்தியா முழுவதும் ஆதார் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 282
* கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, பாலிடெக்னிக் டிப்ளமோ
* வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்
* ஊதிய விவரம்: ரூ.15,000
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு
* விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியாக.
* கடைசித் தேதி: 31.01.2026
* மேலும் விவரங்களுக்கு: https://csc.gov.in/ask
