சென்னை, ஜன.17–- விவசாயம் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு, ஒரு நாடு வளர்ச்சி அடைய விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனிதனாக பிறந்த நமக்கு பசி என்ற உணர்வு இருக்கின்ற வரையில் விவசாயம் அழியாது என்பார்கள். பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வேளாண்மை – உழவர் நலத்துறை வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு இயந்திரங்கள் வாங்க மானியத்தை தமிழ்நாடு அரசு அள்ளி கொடுத்து வருகிறது.
அரசு கொடுக்கும் மானியம்
இந்நிலையில் களை எடுப்பதற்கு… விவசாயிகளுக்கு கவலை எதற்கு…! அரசு மானிய உதவி இருக்கு…! என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தின் கீழ் விசை களையெடுப்பான்கள் வாங்க மானியம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் வேளாண் – உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.
மானியம் விவரம்
2 குதிரைத் திறன் முதல் 5 குதிரைத்திறனுக்குக் கீழ் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடிய இயந்திரம் வாங்க – ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 56,000 வரை மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 60 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 48,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.
சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 40,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 32,000 வரை மானியத்தை அரசு வழங்குகிறது.
70 சதவீதம் மானியம் வழங்கும் அரசு
5 குதிரைத் திறன் முதல் 7.5 குதிரைத்திறனுக்குக் கீழ் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடிய இயந்திரம் வாங்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1,05,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 60 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 90,000 வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 75,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 60,000/- வரை மானியம் வழங்கப்படுகிறது.
அனைத்துத் தரப்பு
விவசாயிகளுக்கும் மானியம்
விவசாயிகளுக்கும் மானியம்
7.5 மற்றும் அதற்கும் மேல் குதிரைத் திறன் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடிய இயந்திரம் வாங்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1,19,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 60 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1,02,000 வரை மானியம் கொடுக்கப்படுகிறது.
சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர்/பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 85,000 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 68,000 வரை மானியமானது தமிழ்நாடு அரசின் உழவர் நலத்துறை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
