நூறாண்டுகளுக்கு முன்பு படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஆளுண்டா?
இன்றைக்கு மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி; எழுத்தாளர்கள் ஏராளம்!
மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் பெருமிதம்!
சென்னை புத்தகக் காட்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி முன்னிலையில் புத்தகங்கள் வெளியீடு நடைபெற்றது. 49ஆவது சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் அரங்கு எண்: F-36இல் இயக்க வெளியீடுகள் விற்பனை நடைபெறுகிறது. அதன் சார்பாக நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!’ புத்தகத்தை ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் வெளியிட்டார். மருத்துவர் சிவபாலன் எழுதிய ‘மனமின்றி அமையாது உலகு!’புத்தகத்தை கவிஞர் மனுஷ்யபுத்திரன் வெளியிட்டார். ‘அமெரிக்காவிலும் ஜாதியா?’’ (ஈகுவாலிட்டி லேப் நிறுவனத்தின் ஆய்வறிக்கை) புத்தகத்தை கவிஞர் சல்மா எம்.பி., வெளியிட்டார். வீ.எம்.எஸ். சுபகுணராஜனுக்கு கவிஞர் கலி.பூங்குன்றனும், கவிஞர் சல்மா எம்.பி.,க்கு வீரமர்த்தினியும், கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு தாம்பரம் முத்தையனும், மருத்துவர் சிவபாலனுக்கு தமிழ்ச் செல்வனும் பொன்னாடை அணிவித்தனர். (14.1.2026)
சென்னை.ஜன.17, சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் நடைபெற்ற மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சார்பில் 49 ஆம் சென்னை புத்தகக் காட்சி 8.01.2026 முதல் 21.01.2026 வரை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் 14.01.2026 பிற்பகல் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய, ”சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்,” மருத்துவர் சிவபாலன் எழுதிய, “மனமின்றி அமையாது உலகு”, அமெரிக்காவின் ஈக்வாலிட்டி லேப் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தமிழில் பெயர்க்கப்பட்டு, ”அமெரிக்காவிலும் ஜாதியா?” ஆகிய மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி வரவேற்புரை வழங்க, கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து உரையாற்றினார். வி.பன்னீர்செல்வம், ஆ.வெங்கடேசன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தே.செ.கோபால், இரா.தமிழ்ச்செல்வன், பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், வே.பாண்டு ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கி சிறப்பித்தார்.
தலைமையுரைக்குப் பின்னர், சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள் புத்தகத்தை ஆய்வாளர் சுபகுணராசன் வெளியிட, ஊடகவியலாளர் விஜய்சங்கர் பெற்றுக்கொண்டார். அடுத்து, மனநல மருத்துவர் சிவபாலன் எழுதிய, “மனமின்றி அமையாது உலகு” புத்தகத்தை, கவிஞர், பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன் வெளியிட, குழந்தைகள் செயற்பாட்டாளர் எழுத்தாளர் இனியன் பெற்றுக்கொண்டார். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) சார்பில் வெளியிடப்பட்ட “அமெரிக்காவிலும் ஜாதியா?” (Caste in America?) எனும் நூலை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா அவர்கள் வெளியிட, ஊடகவியலாளர்கள் இந்திரகுமார் தேரடி மற்றும் ஃபெலிக்ஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மூன்று புத்தகங்களுடன் இரண்டு புத்தகங்கள் சேர்த்து ரூ.410 மதிப்புள்ளவை – சிறப்புத் தள்ளுபடியாக ரூ.350/- க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தோழர்கள் கழகத் தலைவரிடம் உரிய விலை கொடுத்து பெற்றுக் கொண்டனர்.
இறுதியாக கழகத் தலைவர் உரையாற்றினார். (முழு உரையை 4ஆம் பக்கம் காண்க).
இறுதியில் வை.கலையரசன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பெரியார் திடல் மேலாளர் சீதாராமன், ஓட்டுநர் மகேஷ், பெரியார் மாணாக்கன், தொண்டறம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், உடுமலை வடிவேல், சக்திவேல், ஊடகவியலாளர் பர்தீன், த.மரகதமணி, தமிழினியன், அரும்பாக்கம் தாமோதரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், புத்தகக் காட்சியில் 5 ஆம் வரிசையில் அரங்கு எண் F -36 க்கு சென்று, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் அரங்கைப் பார்வையிட்டார். புதிய வெளியீடுகளைத் தனியாக வைக்கும் படி ஆலோசனைகள் வழங்கினார். புத்தகப் பிரியர்கள் மிகுந்த ஆவலுடன் கழகத் தலைவருடன் ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

