பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் எதிரொலியே அம்பேத்கர் நடத்திய மகத் குளம் போராட்டம்!
மதுரை, ஏப்.23- மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் கழக பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பொதுக்குழு உறுப்பினர் இராக்கு தங்கம் தலைமை வகித்தார். மதுரை புறநகர் மாவட்ட தலைவர் த.ம.எரிமலை அனைவரையும் வரவேற்று பேசினார்.
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ப.முத்துக்கருப்பன், மதுரை புறநகர் மாவட்ட ப.க. தலைவர் ச.பால்ராஜ், மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, மதுரை மண்டல தலைவர் கா.சிவ குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர் நா.கணேசன் ஆகியோர் கருத்துரையாற்றிட நிறைவாக “திராவிடர் இயக்கமும் புரட்சியாளர் அம்பேத்கரும்” எனும் தலைப்பில் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்:-
தந்தை பெரியார் நடத்திய மனித உரிமை போராட்டமான வைக்கம் போராட்டத்தையும், பாபாசாகிப் அம்பேத்கர் நடத்திய மகத் குளத்தில் குடிநீர் எடுக்கும் போராட்டத்தையும் ஒப்பிட்டும், இன்றைக்கு சமூக நிலை உயர்ந்திட காரணமான திராவிட இயக்கத்தின் வரலாறையும், மூடநம்பிக்கைகளால் தமிழர்கள் அல்லல்பட்டு ஆற்றாது அடை யும் துயரங்கள் – அதனால் ஏற்படும் விளைவுகளையும், செல்வக் குடும்பத்தில் பிறந்த தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டிய அவசியம் என்ன? என்பதையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் பயணிக்கும் திராவிட மாடல் அரசின் நோக்கங்களை விளக்கியும் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட மகளிரணி தலைவர் பெ.பாக்கியலட்சுமி, தி.மு.க. இலக்கிய அணி பொறுப்பாளர் ராஜேஷ் குமார், தமிழ்ப் புலிகள் கட்சி பொறுப்பாளர் மா.முகிலரசன், 100 ஆவது வட்ட தி.மு.க. பொறுப்பாளர் நேதாஜி ஆறுமுகம், குருசாமி இ.தே.காங்கிரசு கட்சி பொறுப்பாளர் ஓ.வி.ஜி.கஜேந்திரன், தி.இ.த.பேரவை பொறுப்பாளர் இராம. வைரமுத்து, வி.சி.க. பொறுப்பாளர் வி.பி.இன்குலாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் மாவட்ட துணை செயலாளர் பாலா நன்றி கூறினார். அவனியாபுரம் பேருந்து நிலையத்தை சுற்றிலும் கழகக் கொடிகள் கட்டப்பட்டும், ஒலி பெருக்கிகள் வைக்கப்பட்டும் நல்ல முறையில் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கூட்டம் நடந்த பகுதி பேருந்து நிலையம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டு நின்று கருத்துக்களை கேட்டறிந்ததோடு கூட்டம் முடிந்ததும் சொற்பொழிவாளரிடம் வந்து பேசி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.