‘போகி’ என்ற பெயரால் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜன.9 போகியன்று பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விழிப்புணர்வு பிரச்சாரம்

இதுதொடர்பாக வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நம் முன்னோர்கள் இயற்கையான தேவையற்ற பொருட்களைஎரித்து போகியைக் கொண்டாடியதால் சுற்றுச்சூழல்பாதிக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்கால சூழலில் பிளாஸ்டிக் மற்றும் செயற்கை இழைத் துணிகள், ரப்பர், டயர் போன்றவற்றை எரிப்பதால் ஏற்படும் புகைமண்டலம், வாகன ஓட்டிகளுக்கு விபத்துகளை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளையும் உண்டாக்குகிறது. இத்தகைய செயல்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக இத்தகைய பொருட்கள் எரிக்கப்படுவது பெருமளவு குறைந்துள்ளது. இந்த ஆண்டும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் சென்னையின் 15 முக்கிய இடங்களில் காற்றின் தரத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கவும், அதன் முடிவுகளை வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகியைக் கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு

சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி

16ஆம் தேதி தொடங்குகிறது

103 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை, ஜன.9 பள்ளிக் கல்வித் துறையின் பன்னாட்டு புத்தகக் காட்சி சென்னையில் ஜன.16 தொடங்குகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 103 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

பன்னாட்டு புத்தகக் காட்சி

ஜெர்மனியின் ‘பிராங்ஃப்ர்ட்’ பன்னாட்டு புத்தகக் காட்சி 1949-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவே உலகின் பெரிய புத்தகக் காட்சியாக தற்போது விளங்குகிறது. அதேபோல், தமிழ்நாட்டில் பன்னாட்டு புத்தகக்  காட்சியை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி பொது நூலகத்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சென்னையில் பன்னாட்டு புத்தகக் காட்சி 2023-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக பன்னாட்டு புத்தகக் காட்சி-2026 சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் கூறியதாவது: நடப்பாண்டு பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ‘உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும்’ எனும் கருத்தை மய்யமாக கொண்டு நடத்தப்படவுள்ளது. இது புத்தகக் காட்சி என்பதை தாண்டி நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு உரையாடலாக இருக்கும்.

103 நாடுகளின் பிரதிநிதிகள்

2023-இல் பன்னாட்டு புத்தகக் காட்சி 24 நாடுகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த முயற்சி விரிவடைந்து நடப்பாண்டு 103 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். 2025-ஆம் ஆண்டில் 1,354 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தாண்டு 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டு முதல் இந்த கண்காட்சி பொதுமக்கள் பங்கேற்கும் திறந்த தளமாக மாற்றப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாடு வாசகர்கள், உலக பதிப்பாளர்களை நேரடியாக சந்திக்கும் வரலாற்றுச் சூழலும் உருவாகிறது.இதுதவிர தமிழ்நாட்டில் இருந்து 90 பதிப்பாளர்களும், 8 இந்திய மாநிலங்களில் இருந்து 42 பதிப்பாளர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த காட்சியில் கருத்தரங்குகள், நூல் வெளியீடுகள், குழு விவாதங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். மாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மேலும், பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்ட 28 இலக்கிய முகவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பதிப்பு நிறுவனங்களுக்கும் இடையே பாலமாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *