சென்னை, ஜன.4 பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) அறிமுகம் செய்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக-வும் தேர்தலை எதிர்கொள்ள முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்க தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கைக் குழு
இக்குழுவில், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவ அணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார், ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம், ‘கனவு தமிழ்நாடு’ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துகளைக் கேட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளது.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, இணையதளம், வாட்ஸ் அப் எண், தொலைப்பேசி எண் மற்றும் சமூக வலைதள பக்கங்களை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துகளையும் பரிந்துரைகளையும் வழங்கலாம்.
குழுவின் தலைவர் கனிமொழி
இந்நிகழ்வின் போது பேசிய குழுவின் தலைவர் கனிமொழி, “தேர்தல் அறிக்கை மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார். அதை செயலாக்கம் செய்யும் விதமாக வலைதளம் ஒன்றை தொடங்கியுள்ளோம். மக்களிடம் செல்லுங்கள், மக்களின் கருத்துகளை கேளுங்கள் என்ற மய்ய கருத்தின் அடிப்படையில் தான் ஒவ்வொரு முறையும் திமுக தேர்தல் அறிக்கையும் தயாரிக்கப்படுகிறது. சாதாரண மக்கள் தங்கள் கோரிக்கை, தேவைகளை இந்த வலைதளத்தில் தெரிவிக்கலாம்” என்றார்.
பரிந்துரைகளை….
தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கையின் மூலம் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம். ‘நீட்’ விலக்கு பெறுவதில் ஒன்றிய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்ததால் விலக்குப் பெற முடியவில்லை. வரக்கூடிய தேர்தலில் பொதுமக்கள் என்னென்ன பரிந்துரைகளை அளிக்கிறார்களோ அதன் அடிப்படையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.
காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார்கள். எங்களோடு தான் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைவரும் தொடர்கிறார்கள். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு தான் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
