கட்டாக், டிச. 16- ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ‘சாமானியருக்கு நீதியை உறுதி செய்தல்: வழக்குச் செலவுகளைக் குறைப்பதற்கான ‘செயல் திட்டம்’ என்ற தலைப்பில் 14.12.2025 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நீதித்துறைக்கான தடைகள்: அளவுக்கு அதிகமான வழக்குச் செலவுகளும், வழக்குகளை முடிப்பதற்கு ஆகும் காலதாமதமும் நீதித்துறைக்கும், சாமானிய மக்களுக்கும் இடையேயான இருபெரும் தடைகளாகும்.
வழக்குகள் தேக்கமடைதல்: நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடைவது, விசாரணை நீதிமன்றம் முதல் அரசியல் சாசன நீதிமன்றம் வரை நீதித்துறையின் ஒவ்வொரு நிலையிலும் முட்டுக்கட்டையை ஏற்படுத்துகிறது. மேல்மட்டத்தில் ஏற்படும் முட்டுக் கட்டை, கீழ்மட்டத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.
வழக்குகள் தேக்கமடைவதைக் குறைக்க நீதித்துறையின் உள் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். போதுமான எண்ணிக்கையில் நீதிமன்றங்கள் இல்லாவிட்டால், நீதித்துறை நிலை குலைந்துபோகும்.
மத்தியஸ்தம் என்பது உண்மை யான சட்டத் தீர்வாக மாறுவதற்கு அதன் மதிப்பை வழக்காடிகள் புரிந்துகொள்ள வேண்டும். பேசி தீர்வு காண்பதைச் சரணடைவதாகக் கருதாமல், அது தீர்வு காண்பதற்கான ஒரு திட்டமிடலாகக் கருதப்பட வேண்டும்.
தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் அபாயங்கள்
கரோனா காலத்தில் தொழில் நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனினும், ஒருவரின் உருவம், குரலைப் பயன்படுத்தி போலியான காணொலிகள் உருவாக்கப்படுவது மற்றும் எண்ம (டிஜிட்டல்) முறையில் போலியான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது போன்ற அபாயங்கள் உள்ளன.
இந்த அபாயங்களைக் கருத்தில் கொள்ளும்போது, தொழில் நுட்பத்தில் உள்ள இடையூறுகள் மற்றும் அபாயங்களைப் போதுமான அளவு கருத்தில் கொள்ளாமல், நீதிமன்றங்கள் அதை கண்மூடித்தனமாக நம்ப முடியாது.
தொழில்நுட்பத்தின் நோக்கம்: “ஏழைகள், முதியவர்கள், எண்ம தொழில்நுட்பம் குறித்து தெரியாதவர்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படாத சீர்திருத்தம், உண்மையில் சீர்திருத்தம் அல்ல.
இதைக் கருத்தில் கொண்டே, நீதி பரிபாலனத்துக்குத் தொழில்நுட்பம் உதவி செய்ய வேண்டும் என்றும், மனிதத் (நீதிமன்ற) தீர்ப்புக்குத் தொழில்நுட்பம் வலுசேர்க்க வேண்டுமே தவிர, அந்தத் தீர்ப்பைத் தொழில்நுட்பம் வழங்கக் கூடாது என்றும் கூறி வருகிறேன்.” இவ்வாறு தலைமை நீதிபதி சூா்யகாந்த் வலியுறுத்தினார்.
