சென்னை, டிச. 15- சென்னை நந்தம் பாக்கத்தில் நடைபெற்று வரும் யுஇஎஃப் வர்த்தக உச்சி மாநாட்டில், தமிழ்நாடு விரைவில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளா தாரத்தை எட்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதியாகத் தெரிவித்தார்.
அய்க்கிய பொருளாதார மன்றத்தின் (யுஇஎஃப்) 3 நாள் வர்த்தக உச்சி மாநாடு, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்யத்தில் 12.12.2025 அன்று தொடங்கியது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழில்துறை நிறுவனங்கள், 6 ஆயிரம் பார்வையாளர்கள், 1,500 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
‘உன்னத தமிழ்நாடு’
யுஇஎஃப் பிரெசிடென்ட் அகமது புஹாரி, சேர்மன் நவாப் சாதா ஆசிப் அலி, ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநாட்டைத் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்து, 200 அரங்குகளுடன் கூடிய வணிக கண்காட்சியைப் பார்வையிட்டார். 2047ஆம் ஆண்டுக்குள் 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ் நாடு எட்டும் வகையில், ‘உன்னத தமிழ்நாடு’ என்ற தொலைநோக்கு பார்வை கொண்ட வரைவுத் திட்டத்தையும் வெளியிட்டார்.
மாநாட்டில் அவர் பேசியபோது, ‘‘இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம். மகாராட்டிரா போன்ற மாநிலங்களின் வளர்ச்சி 10-11 சதவீதமாக உள்ளது. அதேநேரம், தமிழ்நாடு 16 சதவீதம் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நிர்ணயித்துள்ள 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி நாம் மிக வேகமாகப் பயணித்து வருகிறோம். விரைவில் அதை எட்டுவோம்’’ என்றார். மாநாட்டுக்குத் தலைமை வகித்த நிர்வாகிகள், ‘‘வணிக வளர்ச்சிக்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு.
புதிய சிந்தனை கொண்ட இளம் தலைமுறையினரையும் இதில் நாம் இணைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினர். மாநாட்டில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மாநாட்டின் 2ஆவது நாள் நிகழ்வில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அவர் பேசும்போது, ‘‘சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாடு மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த, சிறந்த மனிதவள மேலாண்மை கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது’’ என்றார்.
இந்த நிகழ்வில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆனந்த் சர்மா, ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பி.எஸ். கிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, அய்.நா. நிலையான வளர்ச்சிக் கவுன்சில் (இந்தியா) தலைவர் அஜ்மல் தஸ்தகீர், பஹ்ரைன் நாட்டின் ஃபக்ரோ பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம். முகமது அப்துல்லா அலி ஃபக்ரோ, கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாகத் தலைவர் ஜின்னா ரஃபிக் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
