புதுடில்லி, டிச.6 திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராகவும், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் சார்பில் வழக்குரைஞர் சபரீஷ் சுப்ரமணியன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குரைஞர் சபரீஷ் சுப்ரமணியன் முறையிட்டார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்தால் தமிழ்நாடு அரசின் மனு பட்டியலிட அனுமதிக்கப்படும் என உத்தரவிட்டார்.
மேகதாது அணை தொடர்பான அறிக்கையை
திருப்பி அனுப்பி விட்டோம்
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தகவல்
புதுடில்லி, டிச.6– மேகதாது அணை தொடர்பான அறிக்கையை நீர்வள ஆணையத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டோம் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது தொடர்பான அறிக்கை நிலுவையில் இல்லை எனவும் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை இன்னும் எங்களிடம் வழங்கப்படவில்லை எனவும் ஹல்தர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு
அரையாண்டுத் தேர்வுகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: டிச.10 டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ஆம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ஆம் வகுப்புக்கு பிற்பகல் 2-4 மணி, 8-ஆம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ஆம் வகுப்புக்கு பிற்பகல் 2- 4.30 மணி, 10-ஆம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ஆம் வகுப்புக்கு பிற்பகல் 1.45 மாலை 5 மணி, 12-ஆம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. டிச.24-ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பா.ஜ.க. : வைகோ
திருப்பரங்குன்றம் விவகாரம் மிகுந்த மன உளைச்சலை அளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக முஸ்லிம்களும், இந்துக்களும் ஒற்றுமையுடன், சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறிய வைகோ, இப்போது இதில் இந்துத்துவா நஞ்சு செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பாஜக தான் என விமர்சித்துள்ள அவர், இந்துத்துவா நஞ்சை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அனில் அம்பானியின்
ரூ.10,000 கோடி முடக்கம்
வங்கிக் கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ரூ.1,120 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முன்னதாக, சமீபத்தில் ரூ.8,997 கோடியை முடக்கிய நிலையில், நேற்றுடன் (5.12.2025) சேர்த்து ரூ.10,117 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அனில் அம்பானி மீது பிடியை இறுக்கி வரும் அமலாக்கத்துறை நிதிக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஒரு மருத்துவத் தகவல்!
மனிதர்களை விட எறும்புகள்தான் அதிகமாக சர்க்கரை சாப்பிடுகின்றன. ஆனால் அவற்றுக்கு சர்க்கரை நோய் வருவதே இல்லை. காரணம், அவற்றின் உடல் அமைப்பு சர்க்கரையை உடனுக்குடன் குளுக்கோஸாக மாற்றி ஆற்றலாக மாற்றம் செய்கிறது. இந்த ஆற்றலைப் பயன்படுத்தியே எறும்புகள் எப்போதும் சுறுசுறுப்பாக உழைக்கின்றன. தேவைக்கேற்ப சர்க்கரை எடுத்துக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கினால் நமக்கும் பிரச்சினை இல்லையல்லவா?
