உழைப்புச் சுரண்டலுக்கு முடிவு கட்டப்படுமா?
சென்னை, நவ.24– வொர்க்-லைப் பேலன்ஸ் என்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத் திருக்கிறது. குறிப்பாக கார்ப்பரேட் நிர்வாகங்கள், ஊழியர்களை நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துக்கொண்டே இருக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக தற்போது ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
பிரசவ விடுப்பு
கார்ப்பரேட் ஊழியர் ஒருவர் தனது மனைவியின் பிரசவத்திற்கு விடுப்பு கேட்டிருக்கிறார். இதற்கு மேலாளர் சொன்ன பதிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட இந்த போஸ்ட் பரவலாக ஷேராகி வருகிறது.
மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனவே 2 நாட்கள் விடுப்பு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் விடுப்பு தர மறுத்த மேனேஜர், இப்போதைக்கு விடுப்பு கிடையாது என்றும் கொஞ்ச நாட்களுக்கு பிறகு விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கு மாற்று வழி மருத்துவமனையில் இருந்து வேலை பார்க்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இத்துடன் அவர் நிறுத்தவில்லை. மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று குதர்க்கமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஊழியர், “என்னால் மருத்துவமனையில் இருந்து வேலை பார்க்க முடியாது. என்னுடைய மனைவிக்கு முதல் பிரசவம் இது. எனவே இரண்டு நாட்கள் விடுப்பு தேவை” என்று கேட்டிருக்கிறார்.
உழைப்புச் சுரண்டல்
பின்னர் வேண்டா வெறுப்பாக மேனேஜர் விடுப்பு கொடுத்து இருக்கிறார். இந்த வாட்ஸ்அப் உரையாடலை ஊழியர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ஊழியர்களுக்கு உரிய காலத்தில் விடுப்பு கொடுப்பது, ஊழியர்களுடைய உரிமைகளை பாதுகாப்பது, உழைப்பு சுரண்டலை தடுப்பது ஆகியவற்றை உறுதி செய்ய சமீபத்தில்தான் நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கப்பட்டது.
இருப்பினும் கார்ப்பரேட் ஊழியர்கள் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவது தொடர்கதையாக இருக்கிறது.
இந்த வாட்ஸ்அப் உரையாடல் குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர். பிரசவ காலத்தில் கூட விடுப்பு கொடுக்க முடியாத அளவுக்கு இந்திய மேனேஜர்கள் ஏன் கல் நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்? என்று சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
