மணிப்பூர் கலவரத் தீ!

Viduthalai
4 Min Read

மணிப்பூரில் பல ஆண்டுகளாக குக்கி, மெய்தி, சுராசந்த்பூர்  சமூகத்தினரிடையே,  வந்தேறிகள் என்றும், மலைவாழ்   மக்களுக்கு பள்ளத்தாக்கில் என்ன வேலை என்றும் பிரிவினை பேசியதே வன்முறைக்குக் காரணம்! இதன் பின்னணியில் பிஜேபி உள்ளது. 

மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மெய்தி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பழங்குடியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; மெய்தி சமுகத்திற்கு எஸ்.டி. தகுதி நிலை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துப் பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் பழங்குடியினரால் ஒற்றுமைப் பேரணி நடத்தப்பட்டது; இந்தப் பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணியை நடத்தியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் இம்பால், சராசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் வன்முறை வெடித்தது.

இதற்கிடையே, மணிப்பூரில் வன்முறை வெடிக்கும் முன்பே, பாஜக மத்திய தலைமையை சந்திப்பதற்காக குக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் குழு  புதுடில்லி சென்றது. கட்சியின் மாநிலத் தலைமை மாற்றம், குறிப்பாக முதலமைச்சர் என்பிரேனை பதவியில் இருந்து விலக்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சைகோட்   பாவ்லியன்லால் ஹாக்கிப், கடந்த சில ஆண்டுகளாக மாநில நிர்வாகம் மணிப்பூர் சமூகங்களை ஓரங்கட்டியதாகக் கூறினார். சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளில் இருந்து கிராம மக்கள் சமீபத்தில் வெளியேற்றப்பட்டனர்; பழங்குடியினத் தகுதிக்கான மெய்தி சமூகத்தின் கோரிக்கையை எதிர்த்து, பழங்குடியினர் அமைப்புகள் 3.5.2023 அன்று நடத்திய அணிவகுப்பு, பெரும்பான்மை சமூகத்திற்கும், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே ஒரு மோதலாக  வெடித்தது. இது ஒரு நீண்ட காலப் போராட்டம்! 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் மெய்தி சமூகம், 40 பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது.

முழு மாநிலத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக மெய்தி சமூகத்தினர் மேற்கொள்ளும் மற்றொரு முயற்சியாகவே இதனைக் கூறுகின்றனர் குக்கி தலைவர்கள். இதுகுறித்து அச்சமூக தலைவர்  ஹாக்கிப்  கூறுகையில், வெளியேற்றும் பிரச்சினை என்பது வெறுமனே கடைசி கட்டம்தான் என்று கூறினார்.  கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த தொடர்ச்சியான நிகழ்வுகள் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள குக்கி-பைடேய்-ஜோமி சமூகத் தினரையும் கோபப்படுத்தியுள்ளது.

மெய்தி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் இம்பால் பள்ளத் தாக்கிலும் இதேபோன்ற வெளியேற்ற நடவடிக்கைகள் நடந்ததாக மாநில அரசு கூறியுள்ளது.

இம்பாலில் ‘பழங்குடியினர் ஒற்றுமை அணி வகுப்பின்’ போது வன்முறையைத் தொடர்ந்து வாகனங்கள் தீ வைக்கப்பட்டன!

இதுகுறித்து ஹாக்கிப் மேலும் கூறுகையில், “காடுகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது என்ற பெயரில் குக்கி சமூகத்தை குறி வைக்கின்றனர். இந்திய வனச் சட்டம் (1927).  மணிப்பூருக்கு  பொருந்தாது, ஏனெனில் அது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு ‘சி’ மாநிலமாகும். மேலும் இந்தச் சட்டம் முதலில் சட்டமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார்.

காடுகள் பாதுகாக்கப்பட்டதாக அறிவிப்பதற்கான நடைமுறைத் தேவை உள்ளது. ஆனால் ஏற்கெனவே உள்ள கிராமங்களுக்கு அத்தகைய அறிவிப்பு கொடுக்கப்பட்டதாக எந்தப் பதிவும் இல்லை.

1970களில் 38 கிராமத் தலைவர்களின் நிலம் வனக் குடியேற்ற அதிகாரியால் பாதுகாக்கப்பட்ட காடுகளிலிருந்து விலக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முதலமைச்சர் தன்னிச்சையாக இந்த உத்தரவை ரத்து செய்தார்; இந்தியாவில் இருந்து வேலைக்காக மியான்மர் சென்று பிறகு அங்கு நடந்த அரசியல் குழப்பம் காரணமாக மீண்டும் மணிப்பூரில்   குடியேறிய சுராசந்த்பூர் சமூகத்தை “வெளி நாட்டினர்” மற்றும் “வெளியாட்கள்” என்று பாஜக பலமுறை குறிப்பிட்டு வருவதை ஹாக்கிப் உள்ளிட்ட குக்கி தலைவர்கள் சுட்டிக்காட்டினர். குக்கி-சோமி பழங்குடியினர் மியான்மரில் உள்ள குகி-சின் மலைகளில் இருந்து வந்தவர்கள்.

பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர் களுக்கு இடையே  வன்முறை வெடித்ததை அடுத்து தீ விபத்து ஏற்பட்டது. மணிப்பூரில் மருந்துகள் தயாரிப்பதற்காக பரவலாக உள்ள, கசகசா சாகுபடிக்கு எதிரான பீரனின் இயக்கம், குக்கி சமூகத்தை குறிவைத்துள்ளது என்று அச்சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம், சுராசந்த்பூரில் இருந்து 16 கிலோ அபின் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த செய்தி அறிக்கையை, பீரனின் செய்தியுடன் பகிர்ந்துள்ளது. கசகசாவை பயிரிடுவதற்காக நமது இயற்கையான காடுகளை அழித்து, போதைப் பொருள் கடத்தல் தொழிலை மேற் கொள்வதற்காக வகுப்புவாத பிரச்சினைகளை மேலும் தூண்டி விடுகிறார்கள். 

வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம், முதலாளிகளின் கைகளில் வனங்கள் சென்றது, எங்கு எங்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ அங்கெல்லாம் மக்களைப் பிரித்து போராட வைத்து, வனங்களில் இருந்து வெளியேற்றி, வனங்களை கொள்ளையடிக்கும் திட்டத்திற்கு பாஜக விதை போடுகிறது என்று  கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் அவர்களின் பிரிவினைவாத செயல்பாடு பெரும் கலவரத்தில் முடிந்துள்ளதை மணிப்பூர் காட்டுகிறது. 

தமிழ்நாட்டிலும் கொங்கு நாடு – அந்த மக்களுக்கு ஆளும் கட்சிகள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறி பிரிவினையைத் தூண்ட சில ஊடகங்களில் உதவியோடு பாஜக முயன்றது . ஆனால் அது ஆரம்ப கட்டத்திலேயே முறியடிக்கப்பட்டது.

பிரிவினை பற்றி குறை கூறும் பிஜேபி மணிப்பூரில் செய்து வருவது பிரிவினை இல்லாமல் வேறு என்னவாம்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *