பாங்காங்க், நவ.13 தாய்லாந்தில் நடைபெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்டர் நேஷனல் 2025′ போட்டியில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த விவசாயி மகள் ஜோதிமலர் கலாச்சாரத் தூதராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், தெற்குக் காக்கூரைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு, அல்லிராணி இணையரின் மகள் ஜோதிமலர் (28). இவர் பி.டெக். முடித்துவிட்டு பெங்களூருவில் அய்.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும், மாடலிங்கும் செய்து வருகிறார். சமீபத்தில் புனேவில் நடந்த `மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025′ போட்டியில் ஜோதிமலர் வெற்றி பெற்றார்.
இதையடுத்து, கடந்த 8ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற `மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025′ அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் ஜோதிமலர் பங்கேற்றார். பன்னாட்டு நாடுகளுக்கிடையே அமைதி, சுற்றுலா, கலாச்சாரப் பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்துக்மாக நடத்தப்பட்ட மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் போட்டியில், இந்தியாவின் பாரம்பரிய, வளமான கலாச்சாரம், மரபு குறித்து விளக்கினார். இதைத் தொடர்ந்து, ஜோதிமலர் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 கலாச்சார தூதராகத் தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து ஜோதிமலர் கூறுகையில், “இந்தியா சார்பில் மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் கலாச்சாரத் தூதராகத் தேர்வானது பெருமையாக உள்ளது. பன்னாட்டு அரங்கில் நமது நாட்டின் வளமான கலாச்சாரம், மரபுகள், பாரம்பரியத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தியதில் பெருமை கொள்கிறேன்” என்றார்.
