12.08.1944 – குடிஅரசிலிருந்து…
சித்திரபுத்திரன்
மூன்றாம் திருமுறை திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் – கவுசிகம் என்னும் தலைப்பில், 3ஆம் பாட்டு
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத் திருவாலவா யாயருள்
பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேயமண் டெண்ணற் கற்பழிக்கத் திருஉள்ளமே என்பதாகும். இதன் கருத்து என்ன?
திருஞானசம்பந்தர் தமிழ்நாட்டில் ஆரியப் பிரசாரம் செய்தவற்கு முன்பு, தமிழ்நாட்டில் இருந்த மக்கள் யார்? திராவிடர்கள்தானா – அல்லவா?
அந்தத் திராவிட மக்கள்தானே இந்தச் சம்பந்தர் முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத்தாலும், ஜாலவித்தைகளாலும் பலாத்கார கொடுமைச் செயல்களாலும் சைவர்களாக ஆனார்கள். இந்தத் திராவிடர்களின் (பெண்களை) மனைவிகளைத்தானே கற்பழிக்கத்திரு உளமே என்று சம்பந்தர் பாடினது? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கின்ற விபரத்தைப் பண்டிதர்கள், சைவப் பண்டிதர்கள் அல்லது கிருபானந்த வாரியார், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கட்டுப்பாடுடையவனாக இருப்பேன்.
புரட்சி என்றால் அதில் அடங்கியிருக்கும் உணர்ச்சி, ஒற்றுமையேயாகும். அடுத்த பாகம், தியாக புத்தியேயாகும். அதற்கு அடுத்தது சுயமரியாதையாகும். ஒற்றுமையும், தன்னல மறுப்பும், சுயமரியாதையும் புரட்சியின் ஏ, பி, சி, டி. இந்த ஏ,பி,சி,டி, கூடப் படிக்காதவன் புரட்சியைப் பற்றி பேசத் தகுதியற்றவன்.