வைக்கம் போராட்டம்: தந்தை பெரியார் முதல் முறை சிறையில் அடைக்கப்பட்ட அருவிக்குத்தியில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.4 கோடி நிதியில் பெரியார் சிலை மற்றும் அருங்காட்சியகம்!
ஆலப்புழா, செப்.27 கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா வட்டத்தில் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்தியில் (தற்போது அரூக்குற்றி என்று அழைக்கப்படுகிறது) ரூ.3.99 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் நினை வகம் அமைக்கும் பணிக்கு நேற்று (26.9.2025) கேரள மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சஜி.செரியான் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் முன்னிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஆலப்புழா மாவட்ட ஆட்சித் தலைவர் அலெக்ஸ் வர்கீஸ், அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தலீமா ஜோ ஜோ, முதன்மை தலைமைப் பொறியாளர் (பொது), பொதுப்பணித் துறை (சென்னை) ச.மணிவண்ணன், தலைமைப் பொறியாளர், பொதுப்பணித் துறை கோயம்புத்தூர் ரா.ரங்கநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், செய்தித்துறை இணை இயக்குநர் கே.தமிழ்செல்வராஜன், கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில்அண்ணா, சேர்த்தலா வட்டாட்சியர் சிறீஜா, அரூக்குற்றி கிராம பஞ்சாயத்துத் தலைவர் அஷ்ரஃப் வெல்லேழத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கேரள அமைச்சர் சஜி செரியான் உரை
இந்நிகழ்ச்சியில் கேரள மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சஜி செரியான் பேசியதாவது:
தந்தை பெரியார் அப்போது திருவிதாங்கூர்- கொச்சி நாடுகளின் எல்லையாக இருந்த அருவிக்குத்தி சிறையில் வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காகச் சிறையிலடைக்கப்பட்டவர். அன்று தீண்டமைக் கொடுமைகளை உடைக்க அவர் செய்த தியாகத்தின் நினைவுகள் இந்த மண்ணில் இன்னும் பொருத்தமானவை. கேரள மண்ணில் சமத்துவத்திற்கான இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தலைவர் ஆற்றிய பங்களிப்பு, தென்னிந்தியாவின் சமூக-கலாச்சார உறவுகள் மற்றும் ஒருங்கிணைந்த ஒற்றுமையின் ஆழத்திற்கு ஒரு சான்றாகும்.
நீதி மற்றும் சமத்துவத்திற்காகப் போராடிய தந்தை பெரியார்
நினைவுச் சின்னம்!
வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு விழாவைக் கேரள அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கொண்டாடியது அந்த உறவின் தொடர்ச்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அவர்களின் வருகை இந்தக் கொண்டாட்டங்களுக்குக் கூடுதல் மதிப்பைச் சேர்த்தது. இந்தக் கூட்டுக் கொண்டாட்டம் இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும் சமூக நீதியின் பொதுவான பார்வைக்கு ஒரு சான்றாகும். நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் போராடிய அந்த மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவர் சிறையில் அடைக்கப்பட்ட இடத்தில் ஒரு நினைவுச்சின்னத்தைக் கட்டத் தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு பாராட்டத்தக்கது. தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.4 கோடி நிதியில் பெரியார் சிலை, ஓர் அருங்காட்சியகம், ஒரு மண்டபம் மற்றும் ஒரு பூங்கா ஆகியவை இடம்பெறும். இந்தக் கலாச்சார பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கேரள அரசு இதற்காக அரை ஏக்கர் நிலத்தை வரியின்றி வழங்கியது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
ஒரு போராட்டம்!
வைக்கம் சத்தியாகிரகம் பொது வீதிகள் வழியாக மறுமலர்ச்சி வரலாற்றில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயமாகும். 1924 இல் தொடங்கிய இந்தப் போராட்டம், கேரள சமூக வரலாற்றில் சமத்துவம், சம நீதிக்கான போராட்டங்களுக்கு வழி வகுத்தது. கோயில்களைச் சுற்றிப் பயணிக்கும் உரிமைக்கான இந்த சத்தியாகிரகம் ஒரு உள்ளூர் போராட்டம் அல்ல, மாறாக ஜாதிப் பாகுபாட்டின் இருண்ட சகாப்தத்தை கேள்விக்குள்ளாக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இயக்கமாகும்.
இந்த மாபெரும் போராட்டத்திற்கு வலிமையையும் வழிகாட்டுதலையும் வழங்கிய தலைவர்களில் ஒருவர் தான் தந்தை பெரியார். சத்தியாகிரகம் அதன் முக்கியமான கட்டத்தில் இருந்தபோது அவர் வைக்கத்தை அடைந்தார். வைக்கம் சத்தியாகிரகம் அதன் வலிமையை இழக்காமல் பார்த்துக் கொள்வதில் பெரியாரின் இருப்பும், தலையீடும் மிக முக்கியமானவை. அவரது தீவிர சமூக சீர்திருத்த நிலைப்பாடும், அர்ப்பணிப்பும் இந்தப் போராட்டத்திற்குப் புதிய சக்தியை ஊட்டின.
இந்த நினைவுச்சின்னம் வெறும் கட்டடம் அல்ல; சமூக சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட ஒரு சிறந்த மனதை நினைவுபடுத்துவதாகும். இந்த நினைவுச்சின்னம் வரும் தலைமுறைக்குச் சமூகத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பேணுவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டும் என்று நான் நம்புகிறேன். இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கேரள மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சஜி.செரியான் பேசினார்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உரை
பின்னர் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் பேசியதாவது,
சமூக நீதிக்காகப் போராடிய தந்தை பெரியார், காந்தியாரின் ஆணைக்கிணங்க கேரளா மாநிலம் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் சிறை வைக்கப்பட்ட இந்த இடத்தை நினைவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரூக்குற்றில் ஒரு நினைவகம் கட்டப்படும் என அறிவித்தார்கள்.
வைக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம் ரூ.8.14 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு, புதியதாக நூலகம் ஒன்றும் கட்டித் திறந்து வைக்கப்பட்டது. 12.12.2024 அன்று, நடைபெற்ற அந்த மாபெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கேரளா மாநில முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திறந்து வைத்து சிறப்பித்தார்கள்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இவ்விடத்தில் ஆய்வு கொண்டபோது, பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று இந்த இடத்தில் செய்தித்துறையின் சார்பில் நினைவகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.
அதன்படி செய்தித்துறையின் சார்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில், பொதுப்பணித் துறையின் மூலம் கட்டட வடிவமைப்புகள் அமைக்கப்பட்டு நினைவகம் கட்டும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
அமைச்சர் எ.வ.வேலு உரை
பின்னர் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் பேசியதாவது,
கேரளா மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோயிலுக்குள் அல்ல; கோயில் அமைந்துள்ள நான்கு புறங்களிலும் உள்ள தெருவில் கூட தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு நீண்ட காலமாக இருந்த போது, அங்கிருந்த தாழ்த்தப்பட்ட மக்களும் மற்றவர்களும் வேதனைபட்டு, சுயமரியாதை உணர்ச்சி கொண்டனர். தெருவில் நடக்கும் உரிமை பெற ஒரு சத்தியாக்கிரகப் போராட்டத்தையே தொடங்க வேண்டுமென்று, கேரள காங்கிரஸ் தலைவர்கள் கருதினர்.
அதன்படியே போராட்டம் தொடங்கப்பட்டு, போராட்டத்தில், போராட்டக் குழுத் தலைவர் ஜார்ஜ் ஜோசஃப் உள்பட 19 பேர் வரிசையாகத் திருவாங்கூர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், போராட்டம், தலைவர் இல்லாத திண்டாட்டத்தால் நின்றுவிடும் நிலை ஏற்பட்டது. சிறையில் இருந்தபடியே யோசித்து, ஜார்ஜ் ஜோசப்பும், குரூர் நீலகண்ட நம்பூதிரியும் தந்தை பெரியார் அவர்களுக்கு அவசரம் அவசரமாக ஒரு கடிதம் எழுதினர். சிறையில் இருந்தபடியே இரகசியமாக ஆள் மூலம் கடிதம் கொடுத்தனுப்பினார்கள்.
ஆறு மாதம் தண்டிக்கப்பட்டு கடுங்காவல் கைதியாக வைக்கப்பட்டார் தந்தை பெரியார்!
வைக்கத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்தக் கடிதம் பெரியாருக்கு கிடைத்தது. உடனே வைக்கத்திற்குப் புறப்பட்டு விட்டார். போராட்டத்திற்கு உடனே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இப்போராட்டத்தில் தந்தை பெரியாரும், தோழர் அய்யாமுத்துவும் சிறைப்பட்டனர். கைதான பெரியார், 22.4.1924 இல் ஒரு மாதத் தண்டனை பெற்று இந்த அரூக்குற்றி சிறையில் அடைக்கப்பட்டார். அரசர் லேசான தண்டனை கொடுத்து, விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். மீண்டும் போராடியதால், ஒரு வாரத்தில் தந்தை பெரியார் மறுபடியும் கைது செய்யப்பட்டார். அப்பொழுது, ஆறு மாதம் தண்டிக்கப்பட்டு கடுங்காவல் கைதியாக வைக்கப்பட்டார்.
தந்தை பெரியார் முதல்முறை சிறைப்பட்டு, அரூக்குற்றி சிறையில் அடைக்கப்பட்டவுடன், அவரது துணைவியார் அன்னை நாகம்மையார் இதில் முக்கிய பங்கு கொண்டார். அச்சமயம் தமிழ்நாட்டில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண்கள் இக்கிளர்ச்சியில் பங்கு கொண்டனர். அந்த வேளையில், ஒரு மாதமானதும் தந்தை பெரியார் விடுதலையானார்.
விடுதலை ஆனவுடன் அவருக்கு நாடு கடத்தல் உத்தரவு போடப்பட்டது. தந்தை பெரியார் அந்த நாடு கடத்தல் உத்தரவையும் மீறிப் போராடினார். அதனால், மறுபடியும் கைது செய்யப்பட்டு, ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, திருவாங்கூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இறுதியில் சத்தியாகிரகப் போராட்டம் வெற்றி பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தெருவில் நடக்கும் உரிமை வழங்கப்பட்டது.
வைக்கம் போராட்டம் நாடெங்கும் புகழ் பெற்றது!
தீண்டாமை ஒழிப்பிற்காக இந்தியாவிலேயே முதன்முதல் நடைபெற்று, வெற்றி பெற்றது இந்த வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டமே ஆகும். இந்த வைக்கம் சத்தியாக்கிரகத்தின் பின்னர்தான் கோவில் நுழைவுக் கிளர்ச்சி எங்கும் நடைபெற்று, திருவாங்கூர் கோவில்கள் எல்லாத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் திறந்து விடப்பட்டன. இதனால், வைக்கம் போராட்டம் நாடெங்கும் புகழ் பெற்றுவிட்டது. இதனால் தந்தை பெரியார் அவர்களுக்கு, ‘‘வைக்கம் வீரர்’’ என்ற பெயரே நிலைத்து விட்டது. இன்று, ‘‘வைக்கம் வீரர்’’ என்றால் போதும், தந்தை பெரியார் அவர்களை எல்லோரும் நன்றாக அறிவார்கள்.
தீண்டாமையை எதிர்த்து நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தந்தை பெரியார் 7 முறை கேரளாவிற்கு வந்துள்ளார். வைக்கம் போராட்டத்தின்போது தந்தை பெரியார் கேரளத்தில் 141 நாள்கள் இருந்தார். 2 முறை கைது செய்யப்பட்டுள்ளார். முதல் முறை கைது செய்யப்பட்டபோதுதான், ஒரு மாத தண்டனையில் இந்த அரூக்குற்றி சிறையில் வைக்கப்பட்டிருந்தார். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்ட பெரியார் இரண்டு முறை கைதானபோதும், வைக்கம் போராட்டத்தின்போது தந்தை பெரியார் கேரளத்தில் 67 நாள்கள் பிரச்சாரம் செய்தார். வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் முதல் கைதுக்கும் இரண்டாம் கைதுக்கும் இடைப்பட்ட நாள்கள் 27 ஆகும். வைக்கம் போராட்டத்தில் இரண்டாம் முறை கைதான பெரியார் திருவாங்கூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தந்தை பெரியாரின் புகழ் உலகளாவிய புகழாக நிலைத்து நிற்க, தமிழ்நாட்டு முதலமைச்சர் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பெரியாரின் படத்தைத் திறந்து வைத்து பெருமைப்படுத்தினார்.
அரூக்குற்றி சிறை – தந்தை பெரியார் நினைவகமாக மாற்றம் செய்யப்படுகிறது
அதனைத் தொடர்ந்து, இன்றைய விழாவில், கேரள முதலமைச்சர் அனுமதியோடு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உத்தரவின்படி, தந்தை பெரியார் அவர்கள், வைக்கம் போராட்டத்தில் முதன்முதல் 22.4.1924 அன்று கைது செய்யப்பட்டு, அடைக்கப்பட்டிருந்த இந்த அரூக்குற்றி சிறை, தந்தை பெரியார் நினைவகமாக மாற்றம் செய்யப்படுகிறது. அதற்குரிய அடிக்கல் நாட்டு விழாதான் இன்று இங்கு சிறப்பாக நடைபெற்றது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.