சென்னை, ஆக. 30- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சிவாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று (29.8.2025) ஆய்வு மேற்கொண்டார்.தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சிறப்பு திட்ட செயலாக்கத் துறைச் செயலர் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் பெ.அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் உதயநிதி பேசியதாவது:
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 11.50 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. அதேபோல, மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் 17 லட்சம் வந்துள்ளன.
இந்த மனுக்களை காகிதமாக பார்க்காமல், மக்களின் வாழ்க்கையாக பார்க்க வேண்டும். முடிந்த அளவுக்கு விரைவாக தீர்வுகாண வேண்டும். தீர்வுகாண இயலவில்லை எனில் அதன் காரணத்தை முறையாக பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.