ஒற்றைப் பத்தி

Viduthalai
1 Min Read

ஏழுமலையான் சி.எஸ்.கே. கேப்டனா?

சென்னை அணிக்கும் – குஜராத் அணிக்கும் நடைபெற்ற இறுதி ‘கிரிக்கெட்’ போட்டியில் சென்னை அணி (சி.எஸ்.கே.) தோனி தலைமையில் வெற்றி பெற்றது.

வெற்றிக் கோப்பை விமானம்மூலம் சென்னை வந்து சேர்ந்தது.

அந்தக் கோப்பையை என்ன செய்தார்கள்? சென்னை தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்குக் கொண்டு சென்று பூஜை புனஷ்காரங்களை சாங்கோ பாங்கமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுமாகிய ‘கிரிக்கெட்’ விளையாட்டுக்காரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.

பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பார்வையாளர்களும் பல்வேறு மதங்களையும், மதம் சாராதவர்களும் உண்டு.

விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையைக் காட்டி வெற்றி பெறுகிறார்கள்.

இதில் ஏழுமலையான் எங்கே வந்தான் – குதித்தான்?

மற்றவற்றிற்கெல்லாம் ‘தகுதி – திறமை’ பேசுகிறவர்கள், உண்மையிலேயே ‘‘திறமையைக்” காட்டக் கூடிய விளையாட்டில், ஏன் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த கடவுளை – பக்தியைக் கொண்டுவந்து திணிக்கிறார்கள்?

பொதுவாக, கிரிக்கெட் என்றால் பார்ப்பனர்களுக்கான ஏகபோக விளையாட்டாக இருந்தது. காரணம், அது பணங்காய்ச்சி மரம். இதில் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) வேறு.

விளையாடும் போதே – ஆட்டோகிராபில் கையொப்பம் போடும் அளவுக்கு இலகுவான வசதியான மேல்தட்டு விளையாட்டு!

இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பனர் அல்லாதார் உள்ளே நுழைந்துள்ளனர்.

இரண்டுமுறை உலகக் கோப்பையை இந்தியா வென்றெடுத்தபோதும் கேப்டனாக இருந்தவர்கள் கபில்தேவும், எம்.எஸ்.தோனியுமே தவிர, எந்தப் பார்ப்பனரும் அல்லர்.

ஏழுமலையானைக் கொண்டு வந்து புகுத்தி, வெற்றியை விளையாடியவர்களுக்குக் கொடுக்கும் மனமில்லாமல், பக்திப் பார்ப்பனியத்தின் பாதார விந்தத்தில் திணிக்கின்றனர்.

என்னே மோசடி!

 –  மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *