சேலம் ஆக.15 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்கு நாள் மாநில மாநாடு சேலத்தில் இன்று தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் நாளை (ஆக. 16) நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, அமர்ஜித் கவுர், டாக்டர் கே.நாராயணா, ஆனி ராஜா, சி.எச்.வெங்கடாசலம், டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். நாளை மாலை மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பிலான எழுச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், சிபிஅய் (மா-லெ விடுதலை) மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்
மாநாட்டையொட்டி வரும் 18-ஆம் தேதி பேரணி மற்றும் சேலம் போஸ் மைதானத்தில் பொதுச் செயலாளர் டி.ராஜா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.