லண்டன், ஆக.13 தமிழ்நாடு அரசு மகளிர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சொந்தக் காலில் முன்னேறவும், யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வதற்கு வழிவகுக்கும் திட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழ்நாட்டில் வெற்றிகரமான திட்டமாக உள்ளது. இந்த திட்டமானது கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மாதந்தோறும் ரூ.1000 வரவு வைக்கப்படும்.
இந்த நிலையில், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் டிக்சன் பூன் சட்டப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வா ளர்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் பயன்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வறிக்கை நேற்று (12.8.2025) வெளியிடப்பட்டது. அதில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆண்டு கழித்து விருதுநகர், தருமபுரி, கோவை, நாகை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தத் திட்டம் பெண்களின் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளை அங்கீகரிப்பதாக உள்ளது என தெரிவித்த அந்த ஆய்வறிக்கை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளில் 49 சதவீதம் பேர் தங்களின் அன்றாட வீட்டுத் தேவைகளுக்காக இதனை செலவழிக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டி உள்ளது. மேலும் இந்தத் திட்டம் பெண்களின் மருந்து களுக்கான செலவுகளுக்கு உதவி செய்கிறது என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.