என்.வி. நடராசன் பற்றி தந்தை பெரியார் இவ்வாறு கூறினார்.
‘‘இவர் எனது தனிச் செயலாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல், உண்மை யானவராகவும் இருந்து பணி புரிந்தவர்’’ என்று கூறினார் என்றால், இந்தச் சுயமரியாதைச் சுடரொளியின் பெருமைக்கு வேறு நற்சான்றும் தேவையோ! இவரைப்பற்றி அண்ணாவும் சொல்கிறார்: ‘‘திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்காக, தன்னலமற்று தம்மையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என்! தந்தை பெரியார் அவர்கள், அவர்மீது அன்பைப் பொழிந்ததோடு நிற்கவில்லை. பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். எந்தளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும் அளவுக்கு’’ என்றார்.
கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது கீழ்வேளூரில் தந்தை பெரியார் தன்மானப் பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள் விருந்து விழாவில், தந்தை பெரியாரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே பேசினார். ‘‘அய்யா ஆணையிட்டால் இந்த அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத் தொண்டு செய்யத் தயார்’’ என்றார்
கொண்ட கொள்கையில் இறுதிவரை சிறிதும் தளராமல் இருந்து வாழ்ந்த என்.வி.என். என்ற என்.வி. நடராசன் நினைவுநாள்!