குர்கான், ஜூலை 26 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் நீக்கம் மற்றும் சேர்ப்பு உள்ளிட்ட தில்லு முல்லு குற்றச் சாட்டுக்கு இடையே அரியானா மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக மோடி – அமித் ஷாவுக்கு நெருக்கமான நயாப் சிங் சைனி உள்ளார்.
தொழிலாளர்களுக்குத் தடுப்புக் காவல்
இந்நிலையில், அரியானாவின் குர்கானில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரும் குர்கானில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் துப்புரவுப் பணியாளர்களாகவும், குப்பை சேகரிப்பவர்களாகவும், பொது சுகாதாரப் பணியாளர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும், விநியோக முகவர்களாகவும் பணியாற்றுகிறார்கள். வங்கதேசத்தினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அரியானா காவல்துறை விளக்கம் அளித்தாலும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.
ஜூலை 19 அன்று குர்கானில் உள்ள ஒரு மதுபானக் கடைக்கு வெளியே துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்த மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த ஹபிசூர் ஷேக்கை (வயது 41) காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். ஷேக், காவல்துறையினரின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் காண்பித்துள்ளார்.
ஆனால், குடியுரிமை சரி பார்ப்பு என்ற பெயரில், ஹபிசூர் ஷேக் மற்றும் அவரது குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டு குர்கானில் உள்ள செக்டர் 10இல் உள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 200 பேர் செக்டர் 10இல் உள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தடுப்பு காவல் முகாம்களைப்போன்றது என வழக்குரைஞரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உறுப்பினருமான சுபந்தா சின்ஹா உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் அமனூர் கூறுகையில், “என் சகோதரரிடம் காவல்துறையினர் நகலைக்கொண்டு வாருங்கள். ஆவணங்களை நேரில் சரிபார்க்க வேண்டும் என்று அழைத்துச்சென்றனர். ஆனால், என் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்” என கண்ணீருடன் கூறியுள்ளார்.
அரியானாவில் உள்ள முஸ்லிம் மக்களை விரட்டவே ஆளும் பாஜக அரசு சொந்த நாட்டு மக்களை வங்கதேசத்தினர் என்று கூறி தடுப்புக் காவலில் வைத்துள்ளது. இது பாஜக அரசின் புதிய கொடூரம் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.