7 வயதைக் கடந்த குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் ஆதார் முடக்கம் !

Viduthalai

புதுடில்லி, ஜூலை 16 5 வயது பூர்த்தியடைவதற்கு முன்பு ஆதார் அட்டை பெற்ற குழந்தைகள், தங்கள் 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவர்களின் ஆதார் முடக்கப்பட வாய்ப்புள்ளது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, குழந்தைகளின் ஆதார் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு UIDAI குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து UIDAI வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆதார் பெறுகின்றனர். அப்போது அக்குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் பெறப்படுவதில்லை.

குழந்தைகள் 5 வயது பூர்த்தி செய்தவுடன் ஆதாரில் அவர்களின் கைரேகை, கருவிழிகள் மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும். இதுவே முதல் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (MBU) எனப்படுகிறது.

5 வயது முதல் 7 வயது வரை இலவசமாகவே MBU மேற்கொள்ள முடியும். 7 வயதுக்கு மேல் புதுப்பிப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. 7 வயதைக் கடந்த பின்னரும் குழந்தைகளின் ‘பயோமெட்ரிக்’ விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவர்களின் ஆதார் முடக்கப்பட வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தைகளின் ஆதார் நிலையை உடனே சரிபார்த்து, தேவைப்பட்டால் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கவும்.

மும்பைப் பங்குச் சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கேரள முதலமைச்சர் பெயரில்  மின்னஞ்சல் வந்ததால் பரபரப்பு

மும்பை, ஜூலை 16 மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் புதுடில்லியில் உள்ள இரண்டு கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் புரளியாக இருப்பது தீவிர விசாரணையில் உறுதியாகியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

மும்பை பங்குச் சந்தைக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெயரில் ஒரு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இதில், “நான்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகள் பங்குச் சந்தை கட்டடத்தில் வைக்கப்பட்டு, மதியம் 3 மணிக்கு வெடிக்கும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, BSE நிர்வாகம் உடனடியாக மும்பை காவல்துறையை அணுகியது. மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பயன்படுத்தப்பட்டு, பல மணி நேர தேடுதலுக்குப் பின் எந்த வெடிகுண்டும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

தனியார் கல்லூரி

இதேபோல், புதுடில்லியின் துவாரகாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளி மற்றும் ஒரு தனியார் கல்லூரிக்கு, வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. கல்வி நிறுவன நிர்வாகங்கள் காவல்துறையை அணுகியதை அடுத்து, உள்ளூர் காவல்துறையினர், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த விசாரணையிலும் எந்த வெடிபொருளும் கண்டறியப்படவில்லை.

காவல்துறை இந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவை எங்கிருந்து அனுப்பப்பட்டன என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, பினராயி விஜயன் பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் மூலத்தை அறிய சைபர் குற்றப்பிரிவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த மிரட்டல்கள் பொய்யானவை என்று உறுதியானாலும், இதுபோன்ற சம்பவங்கள் பொது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், முக்கிய நிறுவனங்களை குறிவைத்து இதுபோன்ற புரளிகள் பரவுவது குறித்து காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

 

 

 

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *