சென்னை, ஜூலை 14- இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார்.
இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அபாண்டமாக குற்றம் சாட்டி மீனவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த அராஜக செயலை தடுத்து நிறுத்திடவும், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கக் கோரியும் ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை வலியுறுத்தி உள்ளார்.
ஆயினும் இந்த வேண்டுகோள் விழலுக்கு இறைத்த நீரைப்போல ஆனதேயன்றி பலன் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று (13.7.2025) அதிகாலை கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்து உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் கடிதம்
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:
ஏழு மீனவர்கள் கைது
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயரச் சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
13.07.2025 அதிகாலையில், ஏழு மீனவர்கள், பதிவு எண்- IND-TN-10-MM-746 கொண்ட அவர்களின் இயந்திர மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டனர்.
அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், மற்றொரு இயந்திர படகு (IND-TN-10-MM-1040) இலங்கைக் கடற்படை கப்பலால் மோதப்பட்டதாகவும், இந்தப் படகின் பின்புறம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வருகிறது. மீண்டும் மீண்டும் நிகழும் இந்தச் சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. அவை நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களை நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர்ந்த துயரங்களுக்கும் உள்ளாக்குகின்றன.
உடனடியாக விடுவிக்க நடவடிக்கை
இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில், 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களில் பலர் இன்னும் இலங்கை காவலில் உள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
தற்போது, 232 தமிழ்நாடு மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இன்னும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடர்ச்சியான அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைக்கக்கூடிய அனைத்துத் தூதரக வழிகளையும் மேற்கொள்ளுமாறும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அக்கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.