சிம்லா, ஜூலை 8- இமாச்சல பிரதேசத்தில் 14 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டதால், உள்கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளதாக கூறியுள்ள அம்மாநில முதலமைச்சர், இதனால் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இமாச்சலின் மண்டி, காங்ரா, சம்பா,சிம்லா உள்ளிட்ட மாவட்டங்களில் மேகவெடிப்பு காரணமாக கடந்த 1ஆம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால், 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்தன; சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட ஏராளமான வாகனங்கள் மண்ணில் புதைந்தன.
இந்நிலையில், கனமழை, நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 40 பேரை காணவில்லை. 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு கூறியுள்ளார்.
மேலும் அவர், மாநிலத்தில் 14 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், மாநிலத்தின் உள்கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. என தெரிவித்தார்.
மாநில அவசரகால நடவடிக்கை மய்யத்தின் கணிப்பின்படி மாநிலத்திற்கு இழப்பு ரூ.541 கோடி இருக்கலாம் என கணித்துள்ளது. ஆனால், சேதம் குறித்த தகவல் தொடர்ந்து வருவதால், இழப்பு ரூ.700 கோடி ஆக இருக்கும் என சுக்விந்தர் சிங் சுகு கூறியுள்ளார்.
கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மண்டி மாவட்டத்தில் 176 சாலைகள் மூடப்பட்டுள்ளன. வெள்ளத்தில் 14 பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சிக்கல் ஏற்பட்டுஉள்ளது. அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’, ‘ஆரஞ்சு அலர்ட் ‘ விடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்
பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு
சென்னை, ஜூலை 8- தமிழ்நாட்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் களப்பணிமாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழ்நாட்டில் 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி செல்லாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1இல் தொடங்கவுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணியில் மண்டல மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட உள்ளனர்.
இந்த களப்பணியின்போது பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அதற்கான காரணம் பதிவு செய்யப்பட வேண்டும். அதன்பின் அவர்களை அருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், இதுசார்ந்து பெற்றோர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர இந்தக் களப்பணி தொடர்பாக ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், செயலியில் பதிவேற்றம் செய்தல், மாணவர்களின் வருகைப்பதிவு குறித்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது