பெரியார் மருந்தியல் கல்லூரியில் ஜெனிரிக் மருந்துகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்

viduthalai
2 Min Read

திருச்சி, ஜூலை 6– பெரியார் மருந்தியல் கல்லூரியில் ஜெனிரிக் மருந்துகள் தயாரிப்பு குறித்து பன்னாட்டு கருத்தரங்கம் 03.07.2025 அன்று காலை 10.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் மருந்தியல் பயிற்சித்துறை பேராசிரியர் அ. ஜெசிமா பேகம் வரவேற்பு ரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் கிழக்கு ஆப்பிரிக்காவின்  தான்சானியா நாட்டிலுள்ள Cure Afya மருந்தியல் நிறுவனத்தின் மேலாளருமான ஆர். இராஜகுரு கலந்து கொண்டு ஜெனிரிக் மருந்துகள் தயாரிப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் மருந்தியல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் பெரியார் மருந்தி யல் கல்லூரியில் நடைபெறும் கருத்த ரங்கில் கலந்து கொள்வதில் தாம் பெரும் வாய்ப்பை பெற்றதாகவும், சிறந்த ஆயிரக்கணக்கான மருந்தியல் புத்தகங்களும் ஆய்விதழ்களும் நிறைந்த கலைஞர் கருணாநிதி நூலகத்தை பார்வையிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி யடைவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தரமான மருந்துகளை..

மேலும் குறைந்த விலையில் தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்குவதையே நோக்கமாகக் கொண்டு மருந்தாளுநர்கள் மருந்து தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அத்தகைய தரம் வாய்ந்த மருந்துகளே ஜெனிரிக் மருந்துகள் என்றும் எடுத்துரைத்தார். எளிதாக கிடைக்கக் கூடிய நோய் நீக்கும் மருந்துகளின் பின்னால் பல மருந்தியல் அறிஞர்களின் உழைப்பும் கண்டுபிடிப்புகளும் அதிகம் இருக்கின்றன.

புற்றுநோய்க்கான மருந்துகள் கண்டு பிடிப்பு இன்று வரை ஆராய்ச்சித் துறைக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதுடன் இந்நோய்க்கான சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் விலையும் அதிகமாக உள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு ஆராய்ச்சித் துறைக்கு மருந்தாளுநர்கள் அதிகம் வர வேண்டும் என்றும் மருந்தியல் துறையில் உயர் கல்வியை பெறுவதற்கும் அவர்கள் ஆராய்ச்சித் துறையில் பங்கெடுப்பதற்கும் பல்வேறு மருந்தியல் அமைப்புகள் நடத்தக்கூடிய தேர்வுகள் மற்றும் உதவித் தொகைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் . சிறப்பாக எடுத்துரைத்தார்.  மேலும் GPAT தேர்வில் வெற்றி பெறுவ தற்கான வழிமுறைகளையும் அதற்கான செயல்முறைகளையும் விளக்கினார்.

சிறந்த நூலகம்

மாணவர்கள் படிக்கும் காலங்களி லேயே புத்தகங்களை படித்து குறிப்பெடுக் கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல் வாய்ப்பாக இங்குள்ள மாணவர்களுக்கு சிறந்த நூலகம் கிடைத்திருக்கின்றது. என்னதான் ஊடகங்களின் வழியில் நாம் கருத்துகளை பெற்றாலும் புத்தகத்தில் வாசித்து அறியும் போது தான் அது நம் நினைவில் நீங்காமல் இருக்கும். எனவே மாணவர்கள் நூலகத்தை  அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உலகளாவிய அளவில் மருந்தியல் நிறுவனங்களில் மேற்கொள்ளும் தயாரிப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு மருந்தாக்கவியல் பேராசிரியர் ஏஞ்சலினா ஜெனிபர் சாமி நன்றியுரையாற்றினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் பங்கு கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *