முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது தி.மு.க ஆட்சிதான்! ஜவாஹிருல்லா பேட்டி

Viduthalai

தஞ்சாவூர், ஜூலை  5 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா அளித்த பேட்டி வருமாறு:

இஸ்லாமியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லை. உதாரணமாக, மக்களவையில் 543 உறுப்பினர்களில், 80 இஸ்லாமியர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும்; ஆனால், 24 பேர் தான் உள்ளனர். அரசியல் ரீதியில் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதால், சமூக பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட நிலைகளில் இஸ்லாமியர்கள் பின்தங்கி உள்ளதாக ராஜேந்திர சச் சார் அறிக்கை கூறுகிறது.

எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ப இஸ்லாமியர்களுக்கு லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சிகளில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தி.மு.க., மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொகுதி மறுவரையறையில், இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய தொகுதிகள் எல்லாம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக் கீட்டை வழங்கியது தி.மு.க., ஆட்சி தான். முத்தமிழறிஞர் கலைஞர் 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்தார். அதற்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதற்கிடையில், இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. அதை செய்யாத தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க மாட்டோம் என கூறுவது நன்றி கெட்ட செயல்.

லாக் அப் மரணம் என கூறுவதைவிட, காவல் படுகொலை என சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில், சட்ட விரோத விசாரணைக்கு உத்தரவிட்ட அந்த அதிகாரி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் தண்டிக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால், அதில் நியாயம் இருக்காதோ என்ற அச்சத்தில் தான், சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவு விட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *