‘‘பெருங்கவிக்கோ’’ என்ற உலகறிந்த புலவர் பெருமகன் மானமிகு வா.மு. சேதுராமன் (வயது 91) நேற்றிரவு (4.7.2025) மறைவுற்றார் (1935–2025) என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
எளிய குடும்பத்தில் பிறந்து, தன்னிகரற்ற தனி முயற்சியால் தமிழ் வித்துவான், முதுகலை, சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணியில் ஓய்வு பெற்றாலும் தமிழ்ப் பணியில் ஓய்வு பெற்றாரில்லை.
‘தமிழ்ப் பணி’ என்னும் மாத இதழையும் நடத்தி வந்தவர். அவரது அரும் பணிக்காக தமிழ்நாடு அரசால் ‘கலைமாமணி’, ‘திருவள்ளுவர் விருது’களைப் பெற்றவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனருமாவார்.
கவிதை, காவியம், நாடகங்கள் என்று எண்ணற்ற நூல்களை எழுதி உள்ளார்.
தள்ளாத வயதிலும் மொழி உணர்வையும், இனவுணர்வையும் பரப்பும் வகையில் ஓயாது நடைப் பயணம் மேற்கொண்டவர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளையும் சுற்றி தமிழ்த் தொண்டாற்றியவர். அவர்தம் இழப்பு என்பது அவரின் குடும்பத்தைப் பொறுத்தது மட்டுமல்ல; தமிழ் மக்களுக்கே ஏற்பட்ட இழப்பு!
சில மாதங்களுக்கு முன்புதான் அவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பெரியார் திடலில் சிறப்புடன் நடத்தப் பெற்று, நாமெல்லாம் கலந்து கொண்டு, வாழ்த்தி மகிழ்ச்சியுற்றோம். சென்னை பெரியார் திடலில் நடக்கும் நமது எல்லா நிகழ்ச்சிகளிலும் முதல் வரிசையில் அமர்ந்து அக மகிழ்ந்தவர்.
மூன்று நாள்முன்புகூட என்னை பெரியார் திடலில் வந்து சந்தித்தார்.
அவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உண்டு. அனைவரும் உயர் தனிக் கல்வி பெற்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரும் பணிகளில் சிறப்பாக வாழ்கின்றனர்.
அவர் மறைவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவர்களின் அருமைக் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், உலகம் தழுவிய நண்பர்களுக்கும், தமிழ் அன்பர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
5.7.2025